இந்த சீசனைத் தொடர்ந்து பார்ப்பவர்களுக்கு இந்தப் போட்டி குஷி படம் போலதான். ஜெயிக்கப்போவது சென்னை. ஆனால் எப்படி என்பதற்காகத்தான் பார்த்திருப்பார்கள். அவர்களுக்கு ஷாக் தந்திருக்கிறது வார்னேவிடம் பாடம் படித்த ராஜஸ்தான் ராயல்ஸ். #CSKvsRR
இந்த முறை சென்னை அணியில் இரண்டு மாற்றங்கள். பில்லிங்க்ஸும் கார்ன்ஷர்மாவும் மீண்டும் அணிக்குத் திரும்பினார்கள். ராஜஸ்தான் அணியிலும் இரண்டு மாற்றங்கள். ரெண்டு வருஷமா ரெண்டு டீமும் தடை செய்யப்பட்டு, இந்த சீசனில் ரெண்டாவது முறையாக மோதும்போதும் ரெண்டு மாற்றங்களுடன் ரெண்டு புள்ளிகளுக்காக மோதும் போட்டியில் டாஸ் வென்ற தோனி ராஜஸ்தானை ரெண்டாவதாக பேட்டிங் செய்யலாம் என்றார். சென்னையை விட ராஜஸ்தானுக்குத்தான் அந்த ரெண்டு புள்ளிகள் முக்கியமானவை. ராஜஸ்தானின் சக்ஸஸ்ஃபுல் ஸ்பின்னரான கெளதம் வீசிய முதல் ஓவரில் கொஞ்சம் கஷ்டமான கேட்ச் ஒன்றைத் தந்தார் ராயுடு. ம்ஹூம். பிடிக்கவில்லை ராஜஸ்தான். ஆனால் மூன்றாவது ஓவர் வீச வந்த ஆர்ச்சர் போட்ட பிள்ளையார் சுழியே ராயுடு விக்கெட்தான். கொஞ்சம் எக்ஸ்ட்ரா பவுன்ஸ் ஆன பந்தை இன்சைடு எட்ஜ் ஆக்கி போல்ட் ஆனார் ராயுடு. அடுத்து வந்தவர் ரெய்னா. இந்த சீசனில் பெரிதாக ஷைன் ஆகாத ஜடேஜாவிடம் “எதையாவது மாத்தியே ஆகணும்” எனச் சொல்லியிருக்கிறார்கள். அந்தக் குழந்தை முகத்தில் குறுந்தாடியுடன் வந்தார் சின்னத்தல. ஆனால், தமிழகத்தை தாடி எப்போது ஏமாற்றியிருக்கிறது? தொட்டதெலாம் ரன்தான். அதுவும் நோபால் போட்டு ஆரம்பித்து வைத்தார் ஆர்ச்சர். ஃப்ரீ ஹிட்டில் வைடு போட, “இதெல்லாம் வைடா? ஃபிக்ஸிங்” என அலற ஆரம்பித்தது சமூக வலைதளம்.
ஆர்ச்சரைப் போலவே பிள்ளையார் சுழி போட நினைத்தார் உனட்கட். ஆனால், அது வைடானது. அந்த ஓவரில் லாங் ஆஃபுக்கு போன பந்தை விரட்டிச் சென்று விழுந்து விழுந்து தடுத்து நிறுத்தினார் ஸ்டோக்ஸ். மழை பெய்தால் சூப்பர் ஸாப்பர் பதிலாக ஸ்டோக்ஸை பயன்படுத்தலாம். அப்படி ஒரு பெருக்கு பெருக்கி ஒரு பவுண்டரியைத் தடுத்தார். அதனால் பவர் ப்ளேயில் 56 ஆக வேண்டிய சென்னையின் ஸ்கோர் 55 ஆனதுதான் மிச்சம்.
அதன் பின் மந்தமானது சென்னை அணி. “மெதுமெதுவாய் உனை இழந்தேனே… இழந்ததில் புது சுகம் உணர்ந்தேனே” என ரன்ரேட்டைப் பார்த்து பாடியது வாட்ஸன் – ரெய்னா ஜோடி. ஒரு வழியாக கிடைத்த லூஸ் பால்களை பார்சல் செய்து, 50 ரன் பார்னர்ஷிப்பைப் கடந்து 11வது ஓவரில் சதமடித்தார்கள். அடுத்த ஓவர் ஆர்ச்சர் வீச, பொறுமையிழந்தார் வாட்ஸன். முதல் ஷாட் கீப்பர் தலைக்கு மேல் 4 போனது. ஆனால், அடுத்த பந்து கீப்பர் கையிலே தஞ்சமடைந்தது. “ஃபேன்டஸி டீம்ல எடுத்தவங்களுக்குப் போதுமான பாயின்ட் கொடுத்துட்டேன்ல” என்பது போல நடையைக் கட்டினார் வாட்ஸன். அடுத்த ஓவரிலே “நீ முன்னால போனா நான் பின்னால வாறேன்” எனப் பாடிக்கொண்டே பெவிலியன் திரும்பினார் ரெய்னா.