இந்தியா நடத்திய மிஷன் சக்தி சோதனையால் விண்வெளியில் 400 உடைந்த பாகங்கள் சுற்றி வருகின்றன.
இவை சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தின் மீது மோதும் ஆபத்து உள்ளது’ என நாசா தனது அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளது.விண்வெளியில் 300 கிமீ உயரத்தில் சுற்றி வந்த செயற்கைக்கோளை ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தும், ‘மிஷன் சக்தி’ சோதனையை இந்தியா சமீபத்தில் வெற்றிகரமாக செயல்படுத்தியது.
இந்த சாதனையின் மூலம், இந்த திறனை பெற்றுள்ள அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது.
இந்த வரலாற்று சாதனையை கடந்த 27ம் தேதி பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு தெரிவித்தார்.இந்நிலையில், இந்தியா நடத்திய சோதனையால் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாக, அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசா அதிருப்தி தெரிவித்துள்ளது.
இது குறித்து, அந்த அமைப்பின் நிர்வாகி ஜிம் பிரிடென்ஸ்டைன், விஞ்ஞானிகள் மத்தியில் பேசியதாவது:கடந்த வாரம் இந்தியா நடத்திய செயற்கைக்கோளை சுட்டு வீழ்த்தும் சோதனையால் விண்வெளியில் 400 உடைந்த பாகங்கள் சேர்ந்துள்ளன.
இவற்றை கண்டறியும் சோதனையில் நாசா ஈடுபட்டுள்ளது. இதுவரை 10 செமீ மற்றும் அதற்கு அதிகமான அளவுள்ள 60 துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதில் 24 துண்டுகள் சர்வதேச விண்வெளி ஆய்வு மைய சுற்றுப்பாதையில் ஆபத்தான வகையில் மிதந்து வருகின்றன.
இந்த துண்டுகளால் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கான ஆபத்து 44 சதவீதம் அதிகரித்துள்ளது. இதுபோல் ஒரு நாடு செய்தால், மற்ற நாடுகளும் முயற்சி செய்து பார்க்கும். எனவே, இது ஏற்கக் கூடியது அல்ல.
இதன் விளைவால் எங்களுக்கு என்ன பாதிப்பு ஏற்படும் என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம்.கடந்த 2007ல் சீனா இதே போன்ற சோதனையை விண்வெளியில் நடத்தியது. அதில் ஏற்பட்ட குப்பைகள் குறித்து இன்னமும் ஆய்வு செய்து கொண்டிருக்கிறோம். விண்வெளி சூழல் குறித்து உலகளவில் அதிக விழிப்புணர்வு கொண்ட நாடு அமெரிக்கா மட்டுமே.
அதனால்தான் இன்னமும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் பாதுகாப்புடன் உள்ளது. இதுபோன்று விண்வெளியில் குப்பைகளை அதிகரித்தால், மனிதனை சுமந்து செல்லும் விண்வெளி விமானங்களை இயக்குவது சாத்தியமற்றதாகி விடும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்தியா சொன்னது என்ன?மிஷன் சக்தி சோதனை குறித்து இந்தியா அறிவித்தபோது, ‘இந்த சோதனை தாழ்வான உயரத்தில் நடத்தப்பட்டு இருப்பதால், விண்வெளியில் எந்த குப்பையையும் ஏற்படுத்தாது.
இந்தியா எந்த சர்வதேச விதிமுறையையும் மீறவில்லை’ என்று கூறியது. அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், ஐரோப்பா, கனடா ஆகிய நாடுகள் நிர்வகித்து வரும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையமானது, பூமியின் சுற்றுவட்டப்பாதையில் இருந்து 330 முதல் 435 கிமீ உயரத்தில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

