நடிகர் அஜித்தும், நடிகர் விஜய்யும், இந்தியா-பாக் எல்லையில் இருக்கும் இரு நாட்டு வீரர்கள் போல சித்தரிக்கப்படுகின்றனர். இருவரது ரசிகர்களும்கூட பல இடங்களில் இன்றும் மோதிக் கொண்டுதான் இருக்கின்றனர். ஆனால், அப்படியெல்லாம் ஒன்றுமே கிடையாது; ஒருவர் மீது மற்றொருவர் மிகுந்த மரியாதையுடன் தான் இருக்கின்றனர் என நடிகர் ரமேஷ் திலக் கூறியிருக்கிறார்.
ராஜாவின் பார்வையிலே என்ற படத்தில் நடிகர்கள் அஜித்தும், விஜய்யும் இணைந்து நடித்த பின், இருவரும் படங்களில் சேர்ந்து நடிக்கவில்லை. இதனாலேயே, இவர்களுக்கும் விரிசலும், போட்டி, பொறாமையும் இருப்பதாக வெளியில் செய்தி பரப்பப்பட்டு, இரு தரப்பு ரசிகர்களும் மோதிக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில், நடிகர் அஜித்துடன், விஸ்வாசம் படத்தில் இணைந்து நடித்த நடிகர் ரமேஷ் திலக், அஜித்துடனான தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்திருக்கிறார். அப்போது, நடிகர் விஜய் மீது நடிகர் அஜித் வைத்திருக்கும் மதிப்பு-மரியாதை குறித்து கூறியிருக்கிறார்.
ரமேஷ் திலக் கூறியிருப்பதாவது:
எல்லோரையும் போல, நானும், விஜய், அஜித் மோதல் இருக்கிறதோ என்றுதான் நினைத்திருந்தேன். உண்மையில் அப்படி இல்லை என்பதை, நானே நேரில் பார்த்தேன். விஸ்வாசம் படத்தில் நடிகர் அஜித்துடன் நான் நடித்துக் கொண்டிருந்தேன். அப்போது ஷாட் இடைவெளியில், நடிகர் அஜித், கேரவேனிற்கு ஓய்வு எடுக்கச் சென்று விட்டார். அங்கு அவர், கேரவேனில் இருந்த டி.வி.,யைப் பார்த்துக் கொண்டிருந்தார். நானும், கேரவேனுக்குள் நடிகர் அஜித்துடன் இருந்தேன். அப்போது, டி.வி.,யில், நடிகர் விஜய் நடிப்பில் வெளியான தெறி படத்தின் பாடல் ஒளிபரப்பப்பட்டது. அந்தப் பாடலை ரசித்துப் பார்த்த நடிகர் அஜித், நடிகர் விஜய்யின் நடனம் எனக்கு ரொம்பவும் பிடிக்கும். அவர் பிறவியிலேயே நடனக் கலைஞர் என ரொம்பவும் பெருமையாக பேசினார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. தொடர்ந்தும், நடிகர் விஜய் குறித்த பெருமையான விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.