‛நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ மூலம், தமிழுக்கு வந்தவர் ஷெரின் காஞ்ச்வாலா. தற்போது சிபிராஜ் ஜோடியாக ‛வால்டர்’ படத்தில் நடித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
இயக்குனர் அன்பு முதன்முதலாக என்னிடம் கதையை கூறியபோது அதிர்ச்சியானேன். காரணம் கலங்கடிக்கும் ஒரு குழந்தை கடத்தல் சம்பவத்தை கூறிவிட்டு இது உண்மை கதை என்றார். நாட்டில் இப்படி எல்லாம் நடக்குமா என்று கலங்கி விட்டேன். சமூக நோக்கமும், விழிப்புணர்வும் தரும் ஒரு படத்தில் நடித்திருப்பது மகிழ்ச்சி.
படத்தின் மையம் பதற்றம் தரும் வகையில் இருந்தாலும், இயக்குநர் அன்பு படத்தில் ரொமான்ஸும் சரியான அளவில் வருவது போல திரைக்கதை அமைத்துள்ளார். சாதாரணமாக இந்த வகை திரைப்படங்களில் நாயகிக்கு அதிக முக்கியத்துவம் இருக்காது. ஆனால் இயக்குநர், எனக்கு சிறந்த கதாபாத்திரம் தந்துள்ளார். இப்படியான முக்கியதுவம் மிகுந்த படைப்பில் நானும் பங்குகொண்டதில் மகிழ்ச்சி. படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கிறேன். இப்படம் ரசிகர்களை கமர்ஷியலாக கவருவதுடன் சமுகத்திற்கான தேவையான முக்கியமான கருத்தை கூறுவதாகவும் இருக்கும். என்றார்.