மட்டக்களப்பு மாவட்டம் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள பன்சேனை, கண்டியனாறு ஆற்றுப்பகுதியில் வவுணதீவு பொலிசாரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (10) பிற்பகல் மேற்கொணட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது பெரும் கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் அதிலிருந்த 10 பரல் கோடா மற்றும் 250 லீற்டர் கசிப்புடன் சந்தேகத்தின்பேரில் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார் என வவுணதீவு பொலிஸ்நிலையப் பொறுப்பதிகாரி நிஷாந்த ஹப்புகாமி தெரிவித்தார்.
மேற்படி கண்டியனாறு ஆற்றுப்பகுதியில் கசிப்பு உற்பத்தி மேற்கொள்ளப்படுவதாக வவுணதீவு பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசிய தகவலுக்கமைவாக, பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நிஷாந்த ஹப்புகாமி, உதவி பொலிஸ் பரிசோதகர் சஜித் ரத்னாயக்க போன்றோரின் தலைமையில் நடைபெற்ற இந்த நடவடிக்கையின்போது மேற்படி சட்டவிரோத நடவடிக்கை முறியடிக்கப்பட்டுள்ளது.
இதன்போது ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் சிலர் காட்டுக்குள் தப்பியோடிவிட்டதாகவும், இன்றைய நடவடிக்கையின்போது கசிப்பு உற்ப த்திக்கு பயன்படுத்தப்படும் பொருட்களுடன் மோட்டார்சைக்கிள் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.கைது செய்யப்பட்டவரையும் மேற்படி பொருட்களையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாக வவுணதீவு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நிஷாந்த ஹப்புகாமி தெரிவித்தார்.ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள நிலையில் இவ்வாறான சட்டவிரோத நடவடிக்கைகள் காட்டுப்பகுதியில் அதிகரித்துள்ள நிலையில் இந்த பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகையிடப்பட்டது.