நடிகர் விக்ரம் மகன் துருவ் நடிப்பில், இயக்குனர் பாலா இயக்கிய ‘வர்மா’ திரைப்படம் சென்சார் பணிகள் முடிவடைந்து, ரிலீசுக்கு தயாரான நிலைக்கு வந்தது. அந்த சமயத்தில் என்ன நடந்தது என்றே தெரியவில்லை, படம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இருந்த போதும், தயாரிப்புக் குழு, புதிய வடிவத்தில் படத்தினை மீண்டும் எடுக்கப் போவதாக அறிவித்து, அதற்கான பணிகளில் தீவிரமாக இறங்கி விட்டது.
மீண்டும் உருவாகவுள்ள இந்த படத்தில், துருவ் விக்ரமின் ஜோடியாக பாலிவுட் நடிகை பனிதா சாந்து நடிக்க உள்ளார். இதற்கான அறிவிப்பை படத் தயாரிப்புக் குழு வெளியிட்டுள்ளது.
இதன் அடுத்த கட்டமாக, படத்துக்கான இயக்குநர் யார் என்பதை முடிவு செய்ய படத் தயாரிப்புக் குழு களம் இறங்கி உள்ளது. ‘வர்மா’ படத்தின் மூல படமான ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் இயக்குநரான சந்தீப் வங்கா என்பவரை இயக்க வைப்பது குறித்து, படத் தயாரிப்புக் குழு யோசித்தது. பின், அவரை, இதே ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் ஹிந்தி ரீமேக்கை இயக்கும் பொறுப்பை அவரிடம் ஒப்படைத்து விட்டு, தமிழ் ரீமேக் படத்துக்கு, அதே படத்தில், இவரின் இணை இயக்குநராக பணியாற்றிய கிரியாசா என்பவரை தேர்வு செய்துள்ளனர்.
புதிய தலைப்புடன், புதிய இயக்குனர் மற்றும் புதிய ஹீரோயினுடன் தொடங்கவுள்ள, ‘வர்மா’ படத்தின் படப்பிடிப்பு, வரும் மார்ச் முதல் தொடங்கவுள்ளது.