13 ஆவது திருத்தத்தை மேலும் பலப்படுத்தி அமுலாக்குவது பற்றி மாத்திரம் தமிழ்த் தலைமைகளுடன் பேச்சு வார்த்தை நடத்த முடியுமே தவிர, அதிகாரத்தை பிரிப்பது, சமஸ்டிக்கு செல்வது பற்றியெல்லாம் பேச முடியாது. இவை கட்சியின் கொள்கைக்கு முரணானது என நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
பத்திரிக்கையொன்றிற்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
அதிகார பகிர்வு தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு முக்கியமாக இருந்தாலும் வடக்கு, கிழக்கு மக்களுக்கு அதிகார பகிர்வு என்பது முக்கியமானதல்ல.
ஆட்சிக்கு வந்த உடன் 19ஆவது திருத்ததினை நீக்கி, நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை தொடர்ந்தும் இருக்க வேண்டுமென்பதே எங்களுடைய பிரதான நிலைப்பாடு.
நாட்டில் தற்போது இருக்கும் அரசியலமைப்பிற்குள்ளே தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வினை பெறமுடியும். முதலில் தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்ப்பதற்கான பேச்சு வார்த்தையினை மேற்கொள்ள வேண்டும்.
இம்முறை ஜனாதிபதி தேர்தலில் தமிழ், முஸ்லிம்களின் வாக்குகள் கோத்தபாய ராஜபக்சவிற்கே அதிகளவில் கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.