வாகனத்திற்கான தவணைக் கட்டணம் செலுத்த முடியாததால், அதனை மறைத்து வைத்து கடத்தல் நாடகமாடிய தாயும், மகளும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தனது தாயுடன் கண்டி சென்று வரும் வழியில் தாம் பயணித்த கார் மற்றும் தம் வசமிருந்த ஒன்றரை லட்சம் ரூபா பெறுமதியான நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையிட்டுச் சென்றுவிட்டதாக யுவதியொருவர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
யுவதி கணேமுல்லை பொலிஸ் பிரதேசத்தைச் சேர்ந்தவர். சம்பவம் நடைபெற்ற பிரதேசம் மாவனல்லை என்பதால் அந்தப் பகுதி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.
கடத்தல் சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்த மாவனல்லை பொலிஸார், இவ்வாறான சம்பவம் தமது கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் நடக்கவில்லை என்பதை உறுதிப்படுத்தி, கணேமுல்லை பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
இதனையடுத்து பொலிஸார் மேற்கொண்ட தீவிர விசாரணையில் கடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்ட மாருதிக் காருக்கு ஒன்றரை லட்சம் ரூபா வரையான தவணைக் கட்டணம் செலுத்த வேண்டியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனால் காரை மறைத்து வைத்து தாயும், மகளும் நாடகமாடியிருப்பது தெரிய வந்துள்ளது.
லீசிங் நிறுவனம் காரைப் பறிமுதல் செய்துவிடுவார்கள் என்பதால் அதனைக் குருநாகலில் உள்ள தனது மகனின் வீட்டில் மறைத்துவிட்டு மகளின் துணையுடன் கடத்தல் நாடகத்தை அரங்கேற்றியுள்ளார்.