ஆந்திர மாநில முன்னாள் முதல்வர், நடிகர் என்.டி.ராமராவ் வாழ்க்கை வரலாற்றை அவர் இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்ட லட்சுமி பார்வதியின் பார்வையில், ‘லட்சுமியின் என்டிஆர்’ என்ற படமாக ராம்கோபால் வர்மா, அகஸ்திய மஞ்சு இயக்கியிருந்தனர்.
இந்தப் படம் இன்று தெலுங்கு பேசும் மாநிலங்களான தெலங்கானா, ஆந்திரா மற்றும் உலகம் முழுவதும் வெளியாக இருந்தது. ஆனால், கடைசி நிமிடத்தில் ஆந்திரா உயர்நீதிமன்றம் படத்தை ஆந்திராவில் வெளியிட தடைவிதித்தது. ஆந்திர மாநில தேர்தல் முடியும் வரை படத்தை வெளியிடக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் படதை பேஸ்புக், டிவிட்டர், யு டியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் கூட படத்தை காட்டக்கூடாது என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதனால், இன்று படம் ஆந்திரா மாநிலம் தவிர மற்ற மாநிலங்கள், உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. என்டிஆர் நிறுவிய தெலுங்கு தேசம் கட்சிதான் தற்போது ஆந்திர மாநிலத்தில் ஆளும் கட்சியாக உள்ளது. அதன் தற்போதைய தலைவரான ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை, ‘லட்சுமியின் என்டிஆர்’ படத்தில் வில்லனாக சித்தரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இன்று வெளியான ‘லட்சுமியின் என்டிஆர்’ படத்திற்கும் வரவேற்பு கிடைக்கவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முன் என்டிஆர் மகன் தயாரித்து நடித்த ‘என்டிஆர் கதாநாயகடு, என்டிஆர் மகாநாயகடு’ படங்களைப் போன்றே இந்தப் படமும் தோல்வியைத் தழுவும் என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

