சிங்கள மக்களும் சிங்கள அரசியல்வாதிகளும் சந்தேகத்துடன் நோக்குகிறார்கள் என்றால் உடனடியாக அந்த அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்துவிட்டு வெளியேறவேண்டும். இது அவ்வாறில்லாமல் அந்த அமைச்சுப் பதவிக்குப் பின்னால் கட்டுப்பட்டுக்கொண்டு முஸ்லிங்களை காட்டிக்கொடுக்கிறவர்களாக நாம் ஒருபோதும் இருக்கக் கூடாது என்று தேசிய காங்கிரசின் தேசிய தலைவரும், முன்னாள் அமைச்சருமான அல்ஹாஜ் ஏ.எல்.எம்.அதாஉல்லா தெரிவித்தார்.
தமிழ் லெட்டர் இணையம் ஏற்பாடு செய்த “சமகாலம் தொடர்பில் தலைவர் ஏ.எல்.எம் அதாஉல்லாஹ்வுடன் நமது ஊடகங்கள்” எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற கருத்துரையுடன் இப்தார் நிகழ்வும் நேற்று புதன்கிழமை (22) அக்கரைப்பற்று மாநகர சபை ஹல்லாஜ் வள நிலைய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு அவர் பேசும்போதே இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
முஸ்லிம் சமுகத்துக்காக பாராளுமன்றத்திலும், ஏனைய இடங்களிலும் அமைச்சர் றிஷாத் குரல்கொடுப்பதனால் தான் இவ்வளவு பிரச்சினை அவருக்கு வந்துள்ளதாக அவரின் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். அப்படியென்றால் கபீர் காசிம் போன்ற இன்னும் எத்தனையோ முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள் அவர்களுக்கு ஏன் இப்படியான பிரச்சினை வரவில்லை. இவருக்கு மட்டுதானா பிரச்சினைகள் எல்லாம் வரவேண்டும்.
பூனை இரு கண்களையும் மூடிக்கொண்டு உலகம் இருட்டியதாக சொல்வது போன்றே இருக்கிறது அமைச்சர் றிஷாத்தின் கதை. விவாத நிகழ்ச்சியில் கூட அவரை அவரையே காட்டிக்கொடுத்துவிட்டு இப்போது ஒப்பாரி வைக்கின்றார். அதுமாத்திரமல்லாமல் அந்த அமைச்சினால் இப்ராஹிம் ஹாஜிக்கு பித்தளை கொடுத்த கதையும் போன்ற இன்னும் இன்னும் எத்திரனையோ கதைகள் வருகிறது. இப்படி வருகின்ற நேரம் நாம் சுத்தமாக இருந்தால் அந்த அமைச்சுப் பதவியை தூக்கி வீசிவிட்டு வெளியேறவேண்டும்.
உடைக்கப்பட்ட பள்ளிவாசலில் ஒரே நாளில் மூன்று அஸர் தொழுகையை தொழுதால் மட்டும் மறைந்த தலைவர் மாமனிதர் அஷ்ரப் போன்று ஆகிவிடலாம் என்ற நினைப்பில் தொழுதது மட்டுமே அவருக்கு மிச்சம். வேறு ஒன்றுமில்லை. ஒரு ஜனாதிபதி தேர்தலுக்கு அவர் செய்த அநியாயங்கள் அவர்களுக்கே இப்போது திரும்பி வந்துள்ளது. இதை என்னி அரசியல்வாதிகள் அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள். இன்னும் மூன்று அல்லது நான்கு மாதங்கள் மட்டுமே உள்ள அரசாங்கத்துக்கு மிகப்பெரிய படங்களை காட்டவேண்டாம். உன்னை சுற்றியே எல்லாம் நடக்கிறது. அவற்றையெல்லாம் விளங்கப்படுத்த வேண்டிய இடத்தில் விளங்கப்படுத்த வேண்டும் என அமைச்சர் றிசாத் பதியுதீனை வேண்டிக்கொள்ள விரும்புகின்றேன்.
அவருடைய அமைச்சு முஸ்லிம் சமூகத்துக்கு தேவையான அமைச்சா? அல்லது அரசியலில் அனாதைகளாக்கப்பட்டவர்களுக்கு தவிசாளர் பதவி கொடுப்பதற்கும், வியாபாரம் செய்வதற்க்குமான அமைச்சா? கடந்த காலத்தில் அவருடைய அமைச்சின் பிரிவு ஒன்றில் போதைவஸ்து கடத்தல் இடம்பெற்றது. அப்போது நான் அவரிடம் இந்த அமைச்சை ஏன் மீண்டும் மீண்டும் கேட்கிறாய், உன் பிரதேச மக்களின் அடிப்படை வசதிகளில் பாரிய பின்னடைவு இருக்கிறது அதனை நிவர்த்தி செய்யும் அமைச்சை ஏன் பெறவில்லை. அதனால் தான் உன்னை கடத்தல்காரன் என அடையாளப்படுத்துகிறார்கள் என்றேன். இப்போது அவரை கூடவே பயங்கரவாதி என்கிறார்கள். நீ பயங்கரவாதியா ? இல்லையா? என்பதை இறைவன் அறிவான். அத்தனை குண்டுதாரிகளும் உன்னுள்ளையே இருந்திருக்கிறார்கள். அவர்கள் கூறுவது போன்று பயங்கரவாதியாக நீ இருந்துவிட கூடாது உன்னை அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்.செய்வதெல்லாம் செய்துவிட்டு ஒழிந்துகொள்ள முஸ்லிம் சமூகத்தை பயன்படுத்த வேண்டாம் என்று அவரை நான் கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.