ரயில்வே ஊழியர்கள் தொழிற்சங்கங்கள் நாளை மறுதினம் (29) நள்ளிரவு முதல் முன்னெடுக்கவிருந்த பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கையை கைவிடத் தீர்மானித்துள்ளதாக ரயில்வே தொழிற்சங்கங்கள் இன்று (27) மாலை அறிவித்துள்ளன.
தமது பதவி உயர்வுகள் மற்றும் அதற்கேற்ப சம்பள முரண்பாடுகள் என்பன தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இன்று மலை தொழிற்சங்கப் பிரதிநிதிகள் நடாத்திய பேச்சுவார்த்தையையடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ரயில் நிலையப் பொறுப்பதிகாரிகள் சங்க தலைவர் ஜனக பிரணாந்து தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியுடன் இடம்பெற்ற இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தை இன்று மாலை 4.30 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த முரண்பாட்டைத் தீர்ப்பதற்கு இரண்டு மாத கால அவகாசத்தை ஜனாதிபதி கோரியதாகவும், ஜனாதிபதியின் மீது நம்பிக்கை வைத்து இந்தப் போராட்டத்தை ஒத்திவைப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.