லண்டன் விஜயம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு மார்ச் மாதம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று புதன்கிழமை (28) உத்தரவிட்டுள்ளது.
ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில், தனது மனைவியான பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக லண்டனுக்கு தனிப்பட்ட விஜயம் செய்வதற்காக அரச நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22 ஆம் திகதி பிற்பகல் கைது செய்யப்பட்ட நிலையில் கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவரை ஆகஸ்ட் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதனையடுத்து, உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிக சர்க்கரை அளவு காரணமாக மருத்துவ ஆலோசனையின் பேரில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் உடல்நலக்குறைவு காரணமாக ரணில் விக்ரமசிங்க பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.
இந்நிலையில் குறித்த வழக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று புதன்கிழமை (28) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளபட்ட நிலையில் ரயில் விக்ரமசிங்க நீதிமன்றில் ஆஜராகியிருந்தார்.
இதன்போது, இந்த வழக்கு மீதான விசாரணைகளை மார்ச் மாதத்திற்குள் முடிவுக்கு கொண்டுவருமாறு அதிகாரிகளுக்கு அறிவித்து வழக்கு மார்ச் மாதம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

