நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரும் சமகால நடிகர்கள். 40 ஆண்டுகளாக சினிமாவில் தங்களை தக்க வைத்து கொண்டுள்ளனர். கருணாநிதி, ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் வெற்றிடத்தை உணர்ந்த இருவரும், அரசியல் களத்தில் குதித்தனர்.
கமலுக்கு முன்னரே அரசியல் பயணத்தை வெளியிட்டார் ரஜினி. தொடர்ந்து மாவட்டம் வாரிய நிர்வாகிகளை நியமித்தார். மேலும், ரஜினி ரசிகர் மன்றத்தை மக்கள் மன்றமாக மாற்றினார். ஆனால் அதன்பின்னர் கட்சி பற்றிய அறிவிப்பு வெளியாகவில்லை.
சட்டசபை தேர்தலே இலக்கு, லோக்சபா தேர்தலில் போட்டியில்லை, யாருக்கும் ஆதரவு அளிக்கவில்லை என ரஜினி வெளிப்படையாக கூறிவிட்டு, அடுத்தப்படியாக முருகதாஸின் படத்தில் நடிக்க தயாராகிவிட்டார்.
ரஜினிக்கு பின்னர் அரசியல் ஆசையை வெளியிட்ட கமல்ஹாசன், மக்கள் நீதி மையம் என்ற பெயரில் கட்சி ஆரம்பித்து, இதோ லோக்சபா தேர்தல் மற்றும் தமிழக சட்டசபை இடைத்தேர்தலில் தனித்து களமிறங்கி உள்ளார்.
ரஜினியிடம் ஏற்கனவே கமல்ஹாசன் மறைமுகமாக ஆதரவு கேட்டார். அதாவது, “தேர்தலில் எங்களுக்கு ரஜினி ஆதரவு அளிக்க விரும்பினால் அளிக்கலாம், அது அவரது விருப்பம். இதுதொடர்பாக அவர் மட்டுமே முடிவெடுக்க முடியும்” என முன்பு ஒரு பேட்டியில் கமல் கூறினார்.
இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், “லோக்சபா மற்றும் சட்டசபை இடைத்தேர்தலில் தங்களுக்கு ஆதரவு அளிக்கும்படி ரஜினியிடம் கேட்டதாகவும், அவரும் கண்டிப்பாக செய்கிறேன் என சொன்னதாகவும், ரஜினி ஆதரவு தருவார் என்கிற நம்பிக்கை உள்ளது” என கூறி உள்ளார்.
நீண்டகால நண்பர் என்பதால் கமல்ஹாசனுக்கு, ரஜினி ஆதரவு அளிப்பாரா.? அல்லது வழக்கம் போல் மவுனமாய் இருந்துவிடுவாரா.? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்…!

