இலங்கை முழுவதும், அடுத்த சில நாட்களுக்கு குளிரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
குறிப்பாக வடக்கு, வடமத்திய, மத்திய, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களில் அதிக குளிரான காலநிலை நிலவும் என குறிப்பிடப்படுகின்றது.
வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் தொடர்ந்தும் கூறப்பட்டுள்ளதாவது,
“இலங்கையின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை தொடர்ந்து நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மத்திய மாகணத்திலும், இரத்தினபுரி, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும்.
மேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை, புத்தளம், கேகாலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மத்திய மாகாணத்திலும் இரத்தினபுரி மாவட்டத்திலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது” என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.