சவூதி அரேபியாவில் நடைபெற்ற, பரீஸ் செயின்ற் ஜேர்மைன் அணிக்கும் (பிஎஸ்ஜி), அல் நாசர் – அல் ஹிலால் கழகங்களின் வீரர்கள் இணைந்த றியாத் ஆல் ஸ்டார்ஸ் கூட்டு அணிக்கும் இடையிலான கால்பந்தாட்டப் போட்டியில் நட்சத்திர வீரர்களான லயனல் மெஸி, கிறிஸ்டியானோ ரொனால்டோ கிலியன் எம்பாப்பே ஆகியோர் கோல் புகுத்தினர். இப்போட்டியில் பிஎஸ்ஜி அணி 5:4 கோல்களால் வென்றது.
ரொனால்டோ, எம்பாப்பே ஆகியோர் தலா 2 கோல்களைப் புகுத்தியமை குறிப்பிடத்தக்கது.
றியாத் நகரிலுள்ள மன்னர் பஹத் அரங்கில் நேற்றிரவு இப்போட்டி நடைபெற்றது. போர்த்துகல் அணித்தலைவர் கிறிஸ்டியானோ ரொனானால்டோ சவூதி அரேபியாவின் அல் நாசர் கழகத்தில் இணைந்த பின்னர் அவர் பங்குபற்றிய முதல் போட்டி இதுவாகும்.
இப்போட்டியின் முதல் கோலை பிஎஸ்ஜி வீரர் மெஸி புகுத்தினார். 3 ஆவது நிமிடத்தில் அவர் கோல் புகுத்தினார்.
31 ஆவது நிமிடத்தில் பெனல்டி வாய்ப்பைப் பயன்படுத்தி, றியாத் அணி வீரர் ரொனால்டோ கோல் புகுத்தினார். இதனால் கோல் எண்ணிக்கை 1:1 என சமப்படுத்தப்பட்டது.
43 ஆவது நிமிடத்தில் பிஎஸ்ஜியின் 2 ஆவது கோலை எம்பாப்பே புகுத்தினார். எனினும் இடைவேளைக்கு முன் உபாதை ஈடு நேரத்தில் ரொனால்டோ மீண்டும் கோல் புகுத்தினார்.
இடைவேளையின் போது இரு அணிகளும் 2:2 விகிதத்தில் சமநிலையில் இருந்தன.
55 ஆவது நிமிடத்தில் பிஎஸ்ஜி அணியின் ஆவது கோலை சேர்ஜியோ ரமோஸ் புகுத்தினார். இதனால் பிஎஸ்ஜி 3:2 விகிதத்தில் முன்னிலை பெற்றது.
2 நிமிடங்களின் பின் றியாத் அணி வீரர் ஹையூன் சூ ஜாங் கோல் புகுத்தி, கோல் எண்ணிக்கையை சமப்படுத்தினார்.
60 ஆவது நிமிடத்தில் பிஎஸ்ஜியின் 4 ஆவது கோலை கிலியன் எம்பாப்பே புகுத்தினார். இது இப்போட்டியில் அவரின் 2 ஆவது கோலாகும்.
79 ஆவது நிமிடத்தில் பிஎஸ்ஜியின் ஹியூகோ எகிட்டிக்கே அவ்வணியின் 5 ஆவது கோலை புகுத்தினார்.
90 நிமிட ஆட்ட நேரத்தின்பின். உபாதை ஈடு நேரத்தின் 5 ஆவது நிமிடத்தில் றியாத் அணி வீரர் டெலிஸ்கா கோல் புகுத்தினார.
இறுதியில் இப்போட்டியில் 5:4 கோல்கள் விகிதத்தில் பரிஸ் செயின்ற் ஜேர்மைன் (பிஎஸ்ஜி) அணி வெற்றியீட்டியது.

