ஹரியானாவில் கடும் மூடுபனி காரணமாக நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து சென்ற 50 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி பயங்கர விபத்து நடந்துள்ளது. இதில் 8 பேர் பலியாகியுள்ளனர்.
வடமாநிலங்களில் தற்போது கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. வழக்கமான சராசரி வெப்பநிலையை விடவும் மிகவும் குறைவான வெப்பநிலை காணப்படுகிறது. அத்துடன் அதிகாலை நேரங்களில் அடர்ந்த பனி மூட்டமும் நிலவி வருகிறது. அருகில் இருப்பவர்கள்கூட தெரியாத வகையில் பனிமூட்டம் நிலவுகிறது. வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே மிகுந்த எச்சரிக்கையுடன் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் ஹரியாணா மாநிலம் ரோத்தக்-ரேவாரி நெடுஞ்சாலையில் நேற்று காலையில் ஏராளமான வாகனங்கள் அடுத்தடுத்து சென்று கொண்டு இருந்தன. அப்போது மூடுபனி காரணமாக அடுத்தடுத்து சென்ற வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதின. வரிசையாக சென்ற 50 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி நிலைகுலைந்தன. இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர்.

