முஸ்லிம் மக்களுக்கும் தமிழ் மக்களுக்குமிடையில் புரிந்துணர்வு அற்றநிலை காணப்படுவதாக வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு அமெரிக்க மிசன் கேட்போர் கூடத்தில் நேற்று (செவ்வாய்ககிழமை) இடம்பெற்ற மட்டக்களப்பு மாவட்ட சர்வமத அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியமான இணையம் அமைப்பின் உறுப்பினர்களுடனான சந்திப்பில் கலந்துகொண்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், “முஸ்லிம் மக்களின் பெருக்கம் அதிகமாக இருக்கும்போது எமது வருங்காலம் எப்படி இருக்குமோ என்ற அச்சம் தமிழ் மக்கள் மத்தியில் இருக்கின்றது.
இந்த அச்சத்தின் நிமித்தம் முஸ்லிம் மக்களைத் தமிழ் மக்கள் ஓரளவுக்கு வெறுப்பதாகத் தெரிகின்றது.
வறுமையானது தமிழ் மக்களிடையே பரவியிருப்பதை நாங்கள் பார்க்கின்றோம். அவர்களுடைய வாழ்க்கைத் தரத்தை நாங்கள் உயர்த்த வேண்டும். அதுதான் முக்கியமே தவிர முஸ்லீம் மக்களை வெறுப்பது வழியல்ல.
இங்கு முஸ்லிம் மக்களுக்கும் தமிழ் மக்களுக்குமிடையில் ஒரு புரிந்துணர்வு அற்ற நிலை இருப்பதை நான் அவதானித்திருக்கின்றேன்.
அந்த நிலை தவறு. நாங்கள் தமிழ் பேசும் மக்கள் என்ற வகையில் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட காரணத்தினால் எமக்குள் ஒரு ஒற்றுமையை வைத்திருக்க முடியும்.
எமது அரசியல் நிலைமைகளையும் நாங்கள் புரிந்துணர்வுடன் அணுக வேண்டிய அவசியம் எங்களுக்கு இருக்கின்றது.
தமிழ் மொழி எங்களை ஒன்றிணைத்து வைத்திருக்கும்போது அந்த சகோதரத்துவத்தை நாங்கள் வலியுறுத்தாமல் எங்களிடையே பலவிதமான முரண்பாடுகளை முன்நிறுத்திச் செல்வதாலேயே பல பிரச்சினைகள் ஏற்பட்டுகின்றன.
அந்தவகையிலே எமது பிரச்சினைகளை முறையாக ஓரிடத்தில் இருந்து, நேரடியாகப் பேசி, அதனைத் தீர்க்கும் நிலையொன்று ஏற்படும்” என்று தெரிவித்தார்.