Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

முழு உலகமே ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் இந்திய – பாகிஸ்தான் ரி20 உலகக் கிண்ணப் போட்டி

February 15, 2026
in News, Sports, முக்கிய செய்திகள்
0
முழு உலகமே ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் இந்திய – பாகிஸ்தான் ரி20 உலகக் கிண்ணப் போட்டி

உலக கிரிக்கெட் அரங்கில் மிகவும் கடுமையான போட்டித்தன்மையை ஏற்படுத்தக்கூடியதும் பரபரப்பில் ஆழ்த்தக்கூடியதுமான இந்திய – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான தீர்மானம் மிக்க ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண ஏ குழு போட்டி கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை (15) இரவு 7.00 மணிக்கு மின்னொளியில் ஆரம்பமாகவுள்ளது.

இப் போட்டியைக் கண்டுகளிக்க ஏற்கனவே இரண்டு நாடுகளினதும் ரசிகர்கள் பெருமளவில் காணப்படுவதுடன் அரங்குக்கு வெளியே பெருந்திரளான ரசிகர்கள் திரண்டவண்ணம் உள்ளனர்.

பலத்த பாதுகாப்பு

இப் போட்டியை முன்னிட்டு அரங்கிலும் அரங்கை சூழவுள்ள பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் ரசிகர்கள் தீவிர சோதனைக்குட்படுத்தப்படுகின்றனர்.

ஊடகவியாளர்களின் பிரத்தியேக பஸ்வண்டியும் நுழைவாயிலில் நிறுத்தப்பட்டு ஊடகவியலாளர்கள் இறக்கப்பட்டு  சோதனையின் பின்னரே ஊடகவியலளார்கள் அரங்குக்கு உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

பரமவைரிகளான இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டி நடைபெறாமல் போய்விடுமோ என இரண்டு நாடுகளினதும் ரசிகர்கள் மட்டுமல்லாமல் முழு உலக கிரிக்கெட் ரசிகர்களும்  ஒரு குறிப்பிட்ட காலம்  ஏங்கிக்கொண்டிருந்தனர்.

பாதுகாப்பு காரணங்களைக் காட்டி இந்தியாவில் விளையாட பங்களாதேஷ் பிடிவாதமாக மறுத்ததை அடுத்து அந்த அணியை ரி20 உலகக் கிண்ணத்திலிருந்து ஐசிசி நீக்கியது.

இதனை அடுத்து பங்களாதேஷை ஆதரிப்பதாகவும் ஐசிசியின் இரட்டை நிலைப்பாட்டை கண்டிப்பதாகவும் தெரிவித்து இந்தியாவுடனான போட்டியில் விளையாடப் போவதில்லை என பாகிஸ்தான் அறிவித்தது.

எனினும், ஐசிசியின் கடுமையான எச்சரிக்கை மற்றும் இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பங்களாதேஷ் கிரிக்கெட் சபையினர் நடத்திய தொடர்ச்சியான கலந்துரையாடல்களைத் தொடர்ந்து பாகிஸ்தான் தனது முடிவை மாற்றிக்கொண்டது.

South Asians & Diaspora

கிரிக்கெட் ஆர்வத்தைக் காக்கவும் நேச நாடுகளின் வேண்டுகோளுக்கு இணங்கவும் இந்தப் போட்டியில் பங்கேற்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் உத்தியோகபூர்வமாக அறிவித்ததை அடுத்து முழு உலகமே மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கியது.

இதனை அடுத்து முதல் இரண்டு ரி20 உலகக் கிண்ண அத்தியாயங்களில் சம்பியனான இந்தியாவுக்கும் பாகிஸ்தானும் இடையிலான மற்றொரு அற்புதமான, பரபரப்பான போட்டியை ஆயிரக்கணக்கான ரசிகர்கள் நேரடியாகவும் கோடிக்கணக்கான ரசிகர்கள் தொலைக்காட்சி வாயிலாகவும் கண்டுகளித்து அனுபவிக்க தயாராக உள்ளனர்.

தென் ஆபிரிக்காவில் 2007 நடைபெற்ற முதலாவது அத்தியாயத்திலும் கடைசியாக அமெரிக்காவில் 2024இல் நடைபெற்ற ஒன்பதாவது அத்தியாயத்திலும் சம்பியனான இந்தியா, அப் பட்டத்தை தக்கவைத்துக்கொள்ளும் முனைப்புடன் பத்தாவது அத்தியாயத்தில் விளையாடி வருகிறது.

இந்தியாவும், பாகிஸதானும் இந்த வருட ரி20 உலகக் கிண்ண அத்தியாயத்தில் தத்தமது இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ள நிலையில் இன்றைய போட்டி இரண்டு அணிகளுக்கும் தீர்மானம் மிக்கதாக அமையவுள்ளது.

ஏனேனில் இரண்டு அணிகளும் தோல்வி அடையாமல் இருப்பதற்கும் முதல் அணியாக சுப்பர் 8 சுற்று தகுதியைப் பெறுவதற்கும் முயற்சிக்கவுள்ளன.

ஒருவேளை, மழை குறுக்கிட்டு இப் போட்டியில் முடிவு கிட்டாவிட்டால் இரண்டு அணிகளும் தலா ஒரு புள்ளியைப் பெற்று சுப்பர் 8 சுற்றில் விளையாட ஒன்றாக தகுதிபெறும்.

சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியும் சல்மான் அலி அகா தலைமையிலான பாகிஸ்தான் அணியும சமபலம் வாய்ந்தவையாக தென்படுகின்றன.

இரண்டு அணிகளிலும் திறமையான, அதிரடிக்குப் பெயர் பெற்ற வீரர்களும் பந்துவீச்சில் சாதிக்கக்கூடியவர்களும் இடம்பெறுவதால் இன்றைய போட்டி பரபரப்பான முடிவை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரி20 உலகக் கிண்ணத்தில் இந்தியா ஆதிக்கம்

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான ரி20 உலகக் கிண்ண போட்டி வரலாற்றில் இந்தியா 7 – 1 என்ற வெற்றிகளுடன் ஆதிக்கம் செலுத்தி உள்ளது.

2007இல் முதல் சுற்றில் போல் அவுட் முறையிலும் இறுதிப் போட்டியில் 5 ஓட்டங்களாலும் இந்தியா வெற்றிபெற்றது.

2009 மற்றும் 2010 ரி20 உலகக் கிண்ண போட்டிகளில் இந்தியாவும் பாகிஸ்தானும் இருவேறு குழுக்களில் இடம்பெற்றதால் ஒன்றையொன்று எதிர்த்தாடும் வாய்ப்பு கிட்டவில்லை.

தொடர்ந்து 2012இல் 8 விக்கெட்களாலும், 2014இல் 7 விக்கெட்களாலும், 2016இல் 6 விக்கெட்களாலும் 2022இல் 4 விக்கெட்களாலும், 2024இல் 4 ஓட்டங்களாலும் இந்தியா வெற்றிபெற்றது.

2021இல் 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றிபெற்றது. இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் ஈட்டிய ஒரே ஒரு ரி20 உலகக் கிண்ண வெற்றி இதுவாகும்.

சர்வதேச ரி20 அரங்கில் இரண்டு அணிகளும் நேருக்கு நேர் சந்தித்துக்கொண்ட 16 போட்டிகளில் 13 (போல் அவுட் உட்பட) – 3 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா முன்னிலையில் இருக்கிறது.

இத்தகைய நிலையில் இந்தியா தனது ஆதிக்கத்தை தொடருமா அல்லது பாகிஸ்தான் தனது 4ஆவது வெற்றியை ஈட்டுமா என்ற கேள்விகளுக்கு விடை காணவும் இரண்டு அணிகளினது வீரர்களின் ஆற்றல்களை கண்டுகளிக்கவும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஆர். பிரேமதாச அரங்கில் அணி திரளவுள்ளனர்.

அணிகள் (பெரும்பாலும்)

இந்தியா: சஞ்சு செம்சன் அல்லது அபிஷேக் ஷர்மா, இஷான் கிஷான், திலக் வர்மா, சூரியகுமார் யாதவ் (தலைவர்), ஹார்திக் பாண்டியா, ஷிவம் டுபே, அக்சார் பட்டேல், வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரிட் பும்ரா, மொஹம்மத் சிராஜ்.

பாகிஸ்தான்: சய்ம் அயூப், சாஹிப்ஸதா பர்ஹான், பாபர் அஸாம், சல்மான் அலி அகா (தலைவர்), உஸ்மான் கான், பக்கார் ஸமான், ஷதாப் கான், அப்ரரர் அஹ்மத், மொஹம்மத் நவாஸ், ஷஹீன் ஷா அப்றிடி, நசீம் ஷா.

Previous Post

பயங்கரவாதத்தடைச்சட்டத்தை பதிலீடு செய்யும் அரசு ; ஐரோப்பிய ஒன்றியத்திடம் எடுத்துரைத்த அம்பிகா சற்குணநாதன்

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures