தமிழக முதல்வர் பழனிசாமி குறித்து அவதுாறாக பேசியதாக, திண்டுக்கல் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி தி.மு.க.,தலைவர் ஸ்டாலின், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் பள்ளப்பட்டியில் பிப்.,15ல் தேர்தல் பிரசாரத்தில் ஸ்டாலின் பங்கேற்றார். அவர், ‘முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழகத்தில் அ.தி.மு.க.,ஆட்சி கொடுமையான நிலையில் நடக்கிறது. பதவியை காப்பாற்றிக் கொள்ள வேண்டும். பதவி போய்விட்டால் கொள்ளையடிக்க முடியாது. பதவியில் ஒட்டிக் கொண்டிருக்கக்கூடிய நிலையில்தான் உள்ளது. கொலைகாரர், கொள்ளைக்காரர் தலைமையில் நடக்கும் ஆட்சியில் மக்களுக்கு நல்லது கிடைக்க வாய்ப்பில்லை,’ என பேசியதாக திண்டுக்கல் அமர்வு நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் அவதுாறு வழக்கு தொடர்ந்தார்.
ஸ்டாலின், ‘அரசியல் உள்நோக்கத்தில் கீழமை நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. என்மீதான குற்றச்சாட்டிற்கு எவ்வித முகாந்திரமும் இல்லை. பேச்சுரிமை, கருத்துரிமை இருப்பதை கவனத்தில் கொள்ளவில்லை. கீழமை நீதிமன்றத்தில் ஆஜராக விலக்கு அளித்து, விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். வழக்கை ரத்து செய்ய வேண்டும்,’ என உயர்நீதி மன்ற மதுரைக் கிளையில் மனு செய்தார். விரைவில் விசாரணைக்குபட்டியலிடப்படும்.