சமீபகாலமாகவே சினிமாவை அச்சுறுத்தி வந்த மீ டூ விவகாரம் கடந்த சில நாட்களாகவே பரபரப்பு குறைந்து காணப்படுகிறது. ஒருவகையில் மீ டூ என்கிற அந்த பிரச்சாரத்திற்கு பயந்து, சினிமாவில் பாலியல் தொந்தரவுகள் குறைந்து விட்டதோ என்றுதான் நினைக்க தோன்றுகிறது. இது ஒரு பக்கம் இருக்க, இப்படிப்பட்ட குற்றச்சாட்டில் சிக்கிய ஒரு சிலர், தாங்கள் தவறாக நடந்து இருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள் என்று இறங்கி வருவதும் ஆச்சரியமளிக்கிறது.
மலையாள குணசித்திர நடிகர் அலான்சியர் லே என்பவர் இதே போன்ற ஒரு பாலியல் குற்றச்சாட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிக்கினார். அதேசமயம் தனது செயல்களால் யாராவது காயப்பட்டிருந்தால் தன்னை மன்னித்து விடுமாறு தற்போது பொதுவெளியில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார்.
மலையாள சினிமாவில் பெண்களின் பாதுகாப்பிற்காகவும், பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு தொடர்ந்து எதிர்ப்புக்குரல் கொடுத்தும் வரும் பார்வதி, ரம்யா நம்பீசன், பத்மப்ரியா உள்ளிட்டோர் தங்களது சினிமா பெண்கள் நல அமைப்பின் சார்பாக இவரின் இந்த மனமாற்றத்தையும் மன்னிப்பைப்பையும் பாராட்டி உள்ளனர்.