தென் சீனாவுக்கு பெட்ரோலிய பொருட்களை கொண்டு செல்லும் வகையில் மியான்மர் எல்லையில் சீன அரசு பணிகளை மேற்கொண்டு வருகிறது. மியான்மர் அரசுடன் நெருக்கமாக உள்ள சீனா, ரோஹிங்கியா இஸ்லாமியர்கள் பிரச்னை வெடித்த ராஷின் மாநிலம் வழியாக எல்லையை கடந்து இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டியுள்ளது.
இந்நிலையில் இந்த பைப் லைன் அமைக்கும் திட்டத்துக்கு அப்பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கடந்த சில மாதங்களாகவே விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சீனாவின் தேசிய பெட்ரோலிய கார்பரேஷன் இப்பணியை மேற்கொள்கிறது.
இந்நிறுவனம் பாசன நிலங்களையும், தாவரங்களையும் சீரழித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மனித உரிமை மீறலை மேற்கொள்ளும் சீன நிறுவனம் அதற்குறிய இழப்பீட்டை வழங்க மறுக்கிறது என்று கூறப்படுகிறது.
இந்த பைப் லைன் மூலம் எண்ணெய் மற்றும் எரிவாயுவை கியாவ்க்பியூ.வில் இருந்து ராஷின் மாநிலம் வழியாக யுன்னான் மாகாண தலைவநகர் குன்மிங்கிற்கு சீனா கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளது. இதற்காக மியான்மர் அரசுடன் சீனா 2009ம் ஆண்டில் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. அதோடு டவுன்ஷிப், பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி மண்டலங்களை உருவாக்கவும் சீனா முடிவு செய்துள்ளது.