‘மரகத நாணயம்’ படத்தை இயக்கிய ஏஆர்கே சரவணன் இயக்கத்தில் அதர்வா, பார்வதி நாயர் மற்றும் பலர் நடிக்க, கடந்த ஆண்டு ஆரம்பமான படம் ‘மின்னல் வீரன்’. ஆனால், அதர்வா தயாரித்த ‘செம போத ஆகாத’ படத்தின் வெளியீட்டிற்காக ‘மின்னல் வீரன்’ தயாரிப்பாளர் மதியழகன் 5 கோடி கொடுத்து உதவி செய்தார்.
அதன்பின்னர் ‘மின்னல் வீரன்’ படம் மேலே வளருவதில் தடை ஏற்பட்டது. அதர்வா அந்தப் படத்தில் நடித்து கொடுக்கிறேன் என்று சொன்னாராம். இருந்தாலும் இயக்குனர் சரவணன் படத்தைத் தொடர்ந்து இயக்கத் தயாராக இல்லை என்று சொன்னார்கள். இந்த விவகாரம் தயாரிப்பாளர் சங்கத்தின் பஞ்சாயத்தில் இருந்தது. இப்போது பஞ்சாயத்து முடிந்துவிட்டது போலத் தெரிகிறது.
‘மின்னல் வீரன்’ படத்தில் ஆர்யா கதாநாயகனாக நடிக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தற்போது ‘காப்பான், மகாமுனி’ படங்களில் நடித்து முடித்துள்ள ஆர்யா, இந்தப் படத்தில் நடிக்கத் தயாராகி வருகிறார் என்கிறார்கள். படத்தை தயாரிக்கும் நிறுவனமும் மாறிவிட்டதாம். ஸ்டுடியோ க்ரீன் இப்படத்தைத் தயாரிக்க முடிவு செய்துள்ளது என்கிறார்கள். இன்னும் சில நாட்களில் இது பற்றிய முழுவிவரம் வெளியில் வந்துவிடும்.