ஸ்பெயினில் நடைபெற்ற மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரவ் சாம்பியன் பட்டம் வென்றார். பரபரப்பான இறுதிப் போட்டியில் ஆஸ்திரியாவின் டொமினிக் தீமுடன் (24 வயது, 8வது ரேங்க்) மோதிய ஸ்வெரவ் (21 வயது, 3வது ரேங்க்) 6-4 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார். இரண்டாவது செட்டிலும் டொமினிக்கின் சர்வீஸ் ஆட்டத்தை முறியடித்து புள்ளிகளைக் குவித்த ஸ்வெரவ் 6-4, 6-4 என்ற நேர் செட்களில் வென்று முதல் முறையாக மாட்ரிட் ஓபனில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இப்போட்டி 1 மணி, 18 நிமிடத்தில் முடிவிவுக்கு வந்தது. இந்த தொடரில் நம்பர் 1 வீரர் ரபேல் நடாலை வீழ்த்தி அதிர்ச்சி அளித்திருந்த டொமினிக் தீமின் அதிரடி ஆட்டம் ஸ்வெரவுக்கு எதிராக எடுபடவில்லை. ஸ்வெரவ் வென்ற 3வது மாஸ்டர்ஸ் 1000 அந்தஸ்து சாம்பியன் பட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது. மாட்ரிட் ஓபனில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய அவர் தொடர்ச்சியாக 48 சர்வீஸ் ஆட்டங்களை இழக்காமல் அசத்தியதுடன், ஒரு செட்டில் கூட தோற்காமல் கோப்பையை முத்தமிட்டுள்ளார். களிமண் தரை மைதானங்களில் இளம் வீரர்கள் அலெக்சாண்டர் ஸ்வெரவ், டொமினிக் தீமின் எழுச்சி, நட்சத்திர வீரர்கள் நடால், பெடரர், ஜோகோவிச்சுக்கு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. இதனால், பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் தொடரில் பட்டம் வெல்ல கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.