எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குருநாகல் மாவட்டத்திலும் அவரது மகனும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் போட்டியிடவுள்ளனர் என பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.
பத்தரமுல்லையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நேற்று (திங்கட்கிழமை) ஊடகவியலாளர் சந்திப்பொன்று நடைபெற்றது.
இதன்போது, அதில் கலந்துகொண்ட அக்கட்சியின் உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது, “மஹிந்த ராஜபக்ஷ கடந்த முறைய நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்டு பெறும் வெற்றியை பெற்றிருந்தார். ஆகவே இம்முறை நடைபெறவுள்ள தேர்தலில் பொதுஜன பெரமுன சார்பாக குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார்.
இதேவேளை அம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பிரதிநிதித்துவப்டுத்த முடியாதமையால், அம்மாவட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரர் சமல் ராஜபக்ஷவும் அவரது புதல்வர் நாமல் ராஜபக்ஷவும் போட்டியிடவுள்ளனர்” என அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.