எதிர் வரும் நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் 88 ஆயிரத்து 842 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக மன்னார் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் ஜே.ஜெனிற்றன் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 5ஆம் திகதி நாடாளுமன்ற பொதுத்தேர்தல் இடம்பெறவுள்ளது. மன்னார் மாவட்டத்தில் பொது தேர்தலுக்கான சகல நடவடிக்கைகளும் முக்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மன்னார் மாவட்டத்தில் பொதுத்தேர்தலை ஜனநாயக ரீதியிலும் சுகாதார முறைப்படி நடாத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இம்முறை மன்னார் மாவட்டத்தில் 88 ஆயிரத்து 842 வாக்களிப்பதற்கு வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர். மாவட்டத்தில் தபால் மூலம் வாக்களிப்பிற்கு 4 ஆயிரத்து 259 விண்ணப்பங்கள் இது வரை பெறப்பட்டுள்ளது.
நடைபெற இருக்கின்ற நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் வன்னி மாவட்டத்தில் 6 ஆசனத்தை பெற்றுக்கொள்ள 17 கட்சிகளும், 28 சுயேட்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன.
குறித்த தேர்தலில் வன்னி மாவட்டத்தில் 405 வேட்பாளர்கள் போட்டியிடுகிறனர். மேலும் மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு அலுவலகமானது மாவட்டச் செயலகத்தில் விசேட அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.
எதிர் வரும் நாடாளுமன்ற பொதுத் தேர்தலானது ஜனநாயக ரீதியில் சுகாதார முறைப்படி நடை பெற அனைவரும் ஒத்துழைப்ப வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.