மனிதனும் தெய்வமாகலாம் – திரைப்பட விமர்சனம்
தயாரிப்பு : வயோம் என்டர்டெய்ன்மெண்ட்ஸ்
நடிகர்கள் : செல்வராகவன், குஷி ரவி, கௌசல்யா, மைம் கோபி, வை. ஜி. மகேந்திரா, லிர்த்திகா, சேலம் தீபக் மற்றும் பலர்.
இயக்கம் : டென்னிஸ் மஞ்சுநாத்
மதிப்பீடு : 2/5
செல்வராகவன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் என்பதால்… ரசிகர்களில் ஒரு பிரிவினர்’ மனிதனும் தெய்வமாகலாம்’ படத்தை காண்பதற்கு படமாளிகைக்கு சென்றனர். அவர்கள் எம்மாதிரியான அனுபவத்தை பெற்றார்கள்? என்பதை தொடர்ந்து காண்போம்.
தமிழகத்தின் மேற்கு பகுதியான சேலம் அருகே சாலை வசதிகளோ… மின்விளக்கு வசதிகளோ இல்லாத… பொன் வயல் எனும் கிராமத்தைச் சேர்ந்தவர் ராகவன்( செல்வராகவன்). நெடுஞ்சாலை ஓரத்தில் தன் மூத்த சகோதரியின் கணவருடன் இணைந்து நுங்கு விற்பனை செய்து தன் வாழ்க்கையை நடத்துகிறார்.
தன்னுடைய தோற்றப் பொலிவு குறித்து தாழ்வு மனப்பான்மை கொண்ட ராகவனை.. நகரத்தில் படித்த பெண்ணான செல்வி( குஷி ரவி) திருமணம் செய்து கொள்ள சம்மதிக்கிறார்.
அழகாக இருக்கும் செல்வியை தனக்கு கிடைத்த பொக்கிஷமாக பாதுகாத்து அவளுடன் சந்தோஷமாக குடும்பம் நடத்துகிறார் ராகவன்.
வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு நகர்வதற்காக ராகவன் செல்வி தாபா என நெடுஞ்சாலை பயண வழி உணவகத்தை தொடங்குகிறார். மகிழ்ச்சியாக சென்றுகொண்டிருந்த அவரது வாழ்க்கையில் அதிர்ச்சி ஏற்படுத்தும் வகையில் அவருடைய மனைவி செல்வி திடீரென தற்கொலை செய்து கொள்கிறார்.
நிலைகுலைந்து போகும் ராகவன் தன் மனைவியின் அகால மரணத்திற்கு காரணமானவர்கள் யார்? என்பதை தெரிந்து கொண்டு, அவர் எடுக்கும் விஸ்வரூபம் தான் இப்படத்தின் கதை.
அடிப்படை வசதியற்ற கிராமம்- கந்து வட்டி கொடுமையால் பாதிக்கப்படும் பெண்மணிகள்- இந்த இரண்டு விடயத்தையும் ஒரே கதைக்குள் சொல்லி இருக்கிறார் இயக்குநர்.
தொடக்கத்தில் சில காட்சிகளில் சமூக பொறுப்பை காட்சிகளின் மூலம் சொல்லிய இயக்குநர்… அதற்காக வழக்கமான பழிக்கு பழி வாங்கும் கதையாக தொடரும் போது ரசிகர்களுக்கு சோர்வு தான் ஏற்படுகிறது.
உளவியல் ரீதியாக சமூகத்தின் மீது கோபம் கொள்ளாத… சுயநலம் சார்ந்த குடும்ப அமைப்பின் மீது மட்டுமே கவனம் செலுத்தும் ராகவன் கதாபாத்திரம் … உணர்வு மேலீட்டால் குற்ற செயல்களில் ஈடுபடுவது போன்று வடிவமைத்திருப்பது படு செயற்கை.
இந்த கதாபாத்திரம் சமூகத்துடனான உரையாடலை குறைத்துக் கொண்டு பாதிக்கப்படும் போது மட்டும் வெகுண்டு எழுவது முரண்.
உச்சக்கட்ட காட்சியை நோக்கி முழு திரைக்கதையும் நகர்வது இயக்குநரின் படைப்பு சார்ந்த பலவீனத்தையும், பற்றாக்குறையையும் பறைசாற்றுகிறது.
மிகவும் சிக்கலாக… முழுமையற்ற… வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் ராகவன் கதாபாத்திரத்தை …நடிகரும் இயக்குநருமான செல்வராகவன் தன்னால் முடிந்த அளவிற்கு இயலாபாக நடித்து அந்த கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்ய முயற்சித்திருக்கிறார்.
செல்வி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் புதுமுக நடிகை குஷி ரவி ஓரிரு காட்சிகள் நடிக்க முயற்சித்திருக்கிறார். அவரது தோற்றமும், திரை இருப்பும் ரசிகர்களை எந்த வகையிலும் பாதிக்கவில்லை.
ராகவனின் சகோதரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கௌசல்யா – தனது தோற்றத்தில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டிருப்பதே போதும் என்று நினைத்திருக்கிறார்.
தொழிலதிபராகவும், பெண் பித்தனாகவும், அரசியல்வாதியின் உறவினராகவும் இருக்கும் இன்ப ராஜ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் மைம் கோபி – தன் வழக்கமான வில்லத்தனமான நடிப்பை வழங்கி ரசிகர்களின் வெறுப்பை சம்பாதிக்கிறார்.
மக்கள் தொடர்பு கட்சி என்ற அரசியல் கட்சியின் அதிகாரமிக்க சட்டமன்ற உறுப்பினராக நடித்திருக்கும் வை. ஜி. மகேந்திரா – வழக்கம் போல் தன்னுடைய அனுபவமிக்க நடிப்பை வழங்கி ரசிகர்களை கவர்கிறார்.
ஒளிப்பதிவு ,பாடல்கள், பின்னணி இசை ஆகிய அனைத்தும் பட மாளிகையில் படைப்பை ரசிக்கும் பார்வையாளர்களை உறுத்தாமல் இயல்பாக இருந்தது.
மனிதனும் தெய்வமாகலாம் – பித்தளை சிலை.

