இலங்கை மத்திய வங்கியில் கடமையாற்றும் பெண் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து வங்கியின் ஆளுநர் உட்பட பல மூத்த அதிகாரிகள் தற்போது தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு தொற்று உறுதிசெய்யப்பட்டவர் மத்திய வங்கியின் அலுவலக ஊழியர் எனவும், அவர் மூத்த அதிகாரிகளுக்கு உணவளித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாகவே, மத்திய வங்கியின் ஆளுநர் டபிள்யூ.டி.லக்ஷ்மன் மற்றும் மூத்த அதிகாரிகள் உட்பட 30 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், மத்திய வங்கி கட்டத் தொகுதி தொற்று நீக்கப்பட்டுள்ளதுடன் தொற்ற உறுதியான பெண்ணுடன் நெருங்கிய தொடர்பைப் பேணியவர்கள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மத்திய வங்கி வளாகத்திற்குள் வேறு எவருக்கும் இதுவரை கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அவசர காலங்களில் மத்திய வங்கி சீராக இயங்குவதை உறுதி செய்வதற்காக அவசர பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த சூழ்நிலையிலும், இலங்கை மத்திய வங்கியின் அனைத்து அத்தியாவசிய சேவைகளும் எந்தவித இடையூறும் இன்றி தொடர்ந்து செயற்படும் என்பதை மக்களுக்கு தெரிவிப்பதாக இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.