மாகந்துரே மதூஸ் இரகசியமான முறையில் டுபாயிலிருந்து வேறு ஒரு நாட்டுக்கு தப்பிச் செல்வதற்கு திட்டமிட்டு வருவதாக இலங்கை குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
டுபாய் அல் ரபா பொலிஸ் தடுப்புக் காவலில் மதூஸ் உட்பட 20 பேர் தற்பொழுது அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். மதூஸ் இலங்கைக்கு வராமல் எப்படியாவது வெளிநாடொன்றுக்குத் தப்பிச் செல்வதற்கே முயற்சி செய்து வருவது அவர், நீதிமன்றத்தில் முன்வைத்துள்ள மனு எடுத்துக் காட்டுவதாகவும் கூறப்படுகின்றது.
டுபாய் பொலிஸில் உள்ள மதூஸுடன் கைது செய்யப்பட்டவர்களை ஒரே அடியாக விடுதலை செய்யப்படாமல், கட்டம் கட்டமாக விடுதலை செய்யப்படுவதும் மதூஸை தப்பிக்கச் செய்வதற்கான வாய்ப்புக்களை வழங்கும் ஒரு நடவடிக்கையா? என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக சிரேஸ்ட பொலிஸ் அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.
மதூஸ் தப்பிச் செல்வதற்கான திட்டம் இருப்பதனால், அவரை எப்படியாவது கைது செய்து இலங்கைக்கு அழைத்து வருவதற்கு விசேட பொலிஸ் குழுவொன்றை அமைக்க பொலிஸ் மா அதிபர் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

