முஸ்லிம் சமூகம் தொடர்பில் தான் வெளியிட்ட அறிவிப்பு குறித்து கட்சியின் மத்திய சபையினால் எழுப்பப்பட்ட கருத்துக்களுக்கு விரிவான முறையில் கவனம் செலுத்தி பிவிதுரு ஹெல உறுமய பிரதித் தலைவர் பதவியிலிருந்து இராஜினாமா செய்ததாக மதுமாதவ அரவிந்த தெரிவித்துள்ளார்.
தான் வெளியிட்ட அறிவிப்பினால், கட்சியின் நற்பெயருக்கு பாதிப்பு ஏற்படுவது தொடர்பில் தான் கவலையடைவதாகவும் மதுமாதவ தனது இராஜினாமா கடிதத்தில் தெரிவித்துள்ளதாகவும் சகோதர ஊடகமொன்று சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த சர்ச்சைக்குரிய கீழ்த்தரமான வீடியோ அறிவிப்பு குறித்து ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி ஸ்ரீ லங்கா பொதுஜன முஸ்லிம் பெரமுன கூட்டத்தில் கருத்து வெளியிட்டிருந்தார்.
‘‘இந்த கீழ்த்தரமான வீடியோ வெளியானவுடன் சம்பந்தப்பட்ட தரப்புக்களுடன் நாம் தொடர்புகொண்டோம். எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸவுடன் பேசினோம். ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவுடனும், பிவிதுரு ஹெல உறுமய தலைவர் உதய கம்மம்பிலவுடன் எடுத்துக் கூறினோம். இதற்கு உடனடியாக செயற்பட்ட கோட்டாபய ராஜபக்ஸ எடுத்த நடவடிக்கையை குறித்து எனக்கு குறுந்தகவல் அனுப்பியிருந்தார்.
அவரை கட்சியின் பதவியிலிருந்து நீக்குவதற்கு அக்கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. இவ்வாறான இனவாத நடவடிக்கைகளுக்கு ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ இடமளிப்பவர் அல்லர் என்பது இதனால் தெளிவாகின்றது எனவும் சட்டத்தரணி அலி சப்ரி மேலும் எடுத்துக் காட்டினார்.