பாகிஸ்தானில் சிறுபான்மையினராக உள்ள அஹமதியர்கள், வழிபடும் 70 ஆண்டு பழமையான மசூதி, அந்நாட்டின் பஞ்சாபில் உள்ளது. இந்த மசூதியை எந்த அறிவிப்பும் இன்றி இடித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து , அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பதற்றம் ஏற்பட்டது.
கடந்த 1974 ல் அஹமதி சமுதாயத்தினர், முஸ்லிம் இல்லை என பாகிஸ்தான் பார்லிமென்ட் அறிவித்தது. பின்னர், அவர்கள் முஸ்லிம்கள் என அழைத்து கொள்வதை தடை செய்ததுடன், மத போதனை செய்யவும், யாத்ரீகர்களாக சவுதி செல்லவும் தடை விதித்தது.
இந்நிலையில், பஹவல்பூர் மாவட்டம், ஹிசில்புர் கிராமத்தில் இருந்த, அஹமதியர்களின் வழிபாட்டு தளம் இடிக்கப்பட்டதாக , அந்த சமுதாயத்தின் செய்தி தொடர்பாளர் சலீமுதீன் கூறியுள்ளார்.மேலும் அவர், ஹசில்புர் துணை கமிஷனர் தலைமையிலான போலீஸ் அதிகாரிகள், நோட்டீஸ் எதுவும் அளிக்காமல் 70 ஆண்டுகள் பழமை வாய்ந்த மசூதியை இடித்தனர்.
வழிபாடு நடந்த இடம், எங்கள் சமுதாயத்திற்கு சொந்தமானது. அவர்கள் தான் பல ஆண்டுகளாக நிர்வகித்தனர்.
இந்த இடிப்பு சம்பவத்தை படம் பிடித்த ஒருவரை , எந்தவொரு வழக்கும் இல்லாமல் கைது செய்தனர். இவ்வாறு அவர் கூறினார்.
மசூதி இடிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால், அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அஹமதி சமுதாயத்தினரை, பிரிவினைவாதிகள் தொடர்ச்சியாக தாக்கி வருகின்றனர் என பல ஆண்டுகளாக அந்த சமுதாயத்தினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
பாகிஸ்தானில் வசிக்கும் 22 கோடி பேரில் ஒரு கோடி பேர் முஸ்லீம் அல்லாதவர்கள். 2017 ல் எடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 50 லட்சம் பேர் ஹிந்துக்கள்.
45 லட்சம் பேர் கிறிஸ்தவர்கள். இவர்கள் பெரும்பாலும், சிந்து நகரப்பகுதி, பஞ்சாப் மற்றும் பலுசிஸ்தான் பகுதியில் வசிக்கின்றனர்.
பாகிஸ்தானில் வசிக்கும் சிறுபான்மையினர்களில் அஹமதியர்கள், சீக்கியர்கள் மற்றும் பார்சி சமுதாயத்தினரும் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவார்கள்.













