பொள்ளாச்சி பாலியல் கொடூரம் குறித்த வழக்கில் கைதுசெய்யப்பட்ட நால்வரின் விளக்கமறியல் எதிர்வரும் ஏப்ரல் 2ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகிய 4 பேரின் விளக்கமறியலை நீட்டிக்க வேண்டும் என வலியுறுத்தி சி.பி.சி.ஐ.டி. பொலிஸார் காணொளி காட்சி மூலம் பொள்ளாச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இதன்போது, நீதவான் நாகராஜன், திருநாவுக்கரசு உள்ளிட்ட 4 பேரின் விளக்கமறியலை நீடித்து உத்தரவிட்டார்.
தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான நிதி முகாமையாளர் திருநாவுக்கரசிடம் 4 நாட்கள் சி.பி.சி.ஐ.டி. பொலிஸ் காவலில் வைத்து விசாரிக்க கடந்த 15ஆம் திகதி நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதைத்தொடர்ந்து திருநாவுக்கரசை இரகசிய இடத்தில் வைத்து சி.பி.சி.ஐ.டி.யினர் விசாரணை நடத்தினர்.
இதனிடையே விளக்கமறியல் காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, கைதுசெய்யப்பட்ட திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகிய 4 பேரின் விளக்கமறியலை நீடிக்க வேண்டுமென வலியுறுத்தி சி.பி.சி.ஐ.டி.யினர் இன்று நீதிமன்றில் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்தே தொடர்ந்து விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.