சமூக வலைத்தளங்களில் எதற்குத்தான் சண்டை ஆரம்பமாகும் என்று தெரியவில்லை. எது நடந்தாலும் அதில் ஏதாவது ஒன்றைக் கண்டுபிடித்து சண்டையிட்டுக் கொள்வதே பலரது ரசிகர்களின் வேலையாக இருக்கிறது.
பேனர் விழுந்து இறந்த சுபஸ்ரீ மறைவுக்குப் பின் பல்வேறு அரசியல் கட்சிகள் இனி பேனர் வைக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள். விஜய் ரசிகர் மன்றம் மூலமாகவும், சூர்யா நேரடியாகவும் பேனர் வைக்க வேண்டாம் என சொல்லிவிட்டார்கள். கமல்ஹாசன் டிவி நிகழ்ச்சி மூலம் வேண்டாம் என்றார். ரஜினிகாந்த், அஜித் உள்ளிட்ட மற்ற நடிகர்கள் இன்னும் நேரடியாகவோ, மறைமுகமாகவே அது பற்றி கருத்து தெரிவிக்கவில்லை.
இருந்தாலும் பேனர் வேண்டாம் என யார் முதலில் சொன்னது என சிலரது ரசிகர்கள் சண்டையிட ஆரம்பித்துள்ளார்கள். அதில் சிம்பு, ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரது ரசிகர்களிடையே தற்போது சண்டை ஆரம்பமாகி உள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு வைக்கப்பட்ட, சில வருடங்களுக்கு முன்பு வைக்கப்பட்ட பேனர்களின் புகைப்படங்களை வைத்துக் கொண்டு இப்போது சண்டையிட்டு வருகிறார்கள்.
இது வேண்டாம், அது வேண்டாம் என நடிகர்கள் சொல்வதற்கு முன்பு முதலில் அவர்களது ரசிகர்களை சண்டையிட்டுக் கொள்வதை நிறுத்தினாலே சமூக வலைத்தளங்கள் நிம்மதியாக இருக்கும்.