ஸ்வீடனைச் சேர்ந்த 16 வயது சிறுமி கிரேட்டாவுக்கு நடப்பாண்டின் அமைதிக்கான நோபல் பரிசை வழங்கவேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இவ்வுலகில் ஒரு சிலர் மட்டுமே நாட்டின் மீதும், சமூகத்தின் மீதும் அக்கறை கொண்டு போராட்டங்களை நடத்துவர். அப்படி இருக்கும் சூழலில் ஸ்வீடனைச் சேர்ந்த கிரேட்டா தன்பர்க் (Greta Thunberg) என்ற 16 வயது சிறுமி தனது பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டு, பூமி வெப்பமடைதல் மற்றும் சுற்றுச் சூழல் மாசடைவது குறித்து ஏராளமான போராட்டங்களை முன்னெடுத்து நடத்தியுள்ளார். மேலும் கிரேட்டா பூமியின் மீது அக்கறை கொண்டு சுற்றுச்சூழலைக் காப்பாற்ற ஐரோப்பாவின் பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றுள்ளார்.
இந்நிலையில், நார்வே நாட்டைச் சேர்ந்த 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள், பூமியின் மீது அக்கறை கொண்டு போராட்டம் நடத்தி வரும் கிரேட்டாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கவேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளனர். இது தொடர்பாக பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் ஃப்ரட்டி ஆண்ட்ரே (Freddy Andre), பூமியைக் காப்பாற்றுவதற்கு பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து நடத்தி வரும் கிரேட்டா தான் நோபல் பரிசு பெறுவதற்கு முழுமையான தகுதியுடையவர் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பள்ளி, மற்றும் கல்லூரிகளில் சுற்றுச் சூழல் பற்றிய விழிப்புணர்வு குறித்து ஏராளமான பொது கூட்டங்களிலும் பங்கேற்று வரும் அவர், தனது இளமைப் பருவத்தை அதற்காகவே அர்பணித்து விட்டார் என்றும் ஃப்ரட்டி தெரிவித்துள்ளார்.