ஜனநாயகத்தை நேசிக்கும் அத்தனை சக்திகளையும் இணைத்துக் கொண்டு புதிய கூட்டணியை அமைத்து, ஜனாதிபதியையும், அவரது உத்தரவுகளையும் தோல்வியடையச் செய்வதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
தேர்தல் அறிவிப்பின் பின்னர் நேற்று நள்ளிரவு அலரி மாளிகையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன இதனைக் கூறியுள்ளார்.
ஜனநாயகத்தை ஆதரிக்கும் சகலரும் எம்முடன் உள்ளனர். இந்த அரசாங்கத்தை சர்வதேசம் ஏற்றுக் கொள்வதில்லை. இந்த அரசாங்கம் அமைக்கப்பட்ட முறைமையையும் சர்வதேசம் நிராகரித்துள்ளது. இது 21 ஆம் நூற்றாண்டு. எமக்கு சர்வதேசத்தின் ஆதரவு இன்றி முன்னே செல்ல முடியாது.
தேர்தல் ஒன்றுக்கு நிதி ஒதுக்கீடு செய்யவும் இல்லை. அவ்வாறு நிதி ஒதுக்கீடு செய்வதாக இருந்தால், அது பாராளுமன்றத்தினுாடாகவே இடம்பெற வேண்டும். வேறு ஒதுக்கீடுகள் மூலம் எடுப்பதாக இருந்தாலும் பாராளுமன்றத்தைக் கேட்காமல் முடியாது எனவும் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.