தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் 14.8 மில்லியன் ரூபாய் நிதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புங்குடுதீவு வீட்டுத்திட்டம் இன்று பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டது.
வடக்கு மாகாண ஆளுநர் எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன், யாழ்.மாவட்ட கட்டளைத்தளபதி ருவான் வணிகசூரிய உள்ளிட்டோர் பெயர்ப் பலகையை திரைநீக்கம் செய்ததுடன், வீட்டுத்திட்ட வீடுகளை பயனாளிகளிடம் கையளித்தனர்.
புங்குடுதீவு 1ஆம் வட்டாரத்தில் காணி அற்ற வறிய குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு, 25 குடும்பங்களிற்கு 25 வீடுகள் புதிதாக அமைத்துக் கொடுக்கப்பட்டன.
கடந்த 2017ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த வீட்டுத்திட்டம், பல தடைகளின் மத்தியில் இராணுவத்தினரின் பங்களிப்பில் தற்போது நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில், மதத் தலைவர்கள், யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன், பிரதம செயலாளர் எஸ். பத்திநாதன், அரச அதிகாரிகள், யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மகேஸ் சேனாரத்ன, கடற்படை அதிகாரிகள் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.