முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தாக்கல் செய்த அடிப்படை உரிமை (FR) மனுவை மார்ச் 18 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குற்றப்புலனாய்வு திணைக்களம் (CID) தன்னை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் போதுமான காரணமின்றி கைது செய்து தடுத்து வைத்துள்ளதாகக் கூறி அவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு இன்று திங்கட்கிழமை (09) விசாரணைக்கு உயர் நீதிமன்றில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த மூவர் கொண்ட நீதியரசர்கள் குழாம், மனுவை விசாரணைக்காக எதிர்வரும் 13 மற்றும் 18 ஆகிய திகதிகளில் மீண்டும் அழைக்குமாறு உத்தரவிட்டது.
இந்த மனுவில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர், பொலிஸ் மா அதிபர் மற்றும் சட்ட மா அதிபர் உள்ளிட்டோர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
எவ்வித தகுந்த காரணமுமின்றி பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தம்மைக் கைது செய்து, தடுப்புக் காவலில் வைத்துள்ளமை சட்டவிரோதமானது என பிள்ளையான் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் தனது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகத் தீர்ப்பளிக்குமாறும் அவர் நீதிமன்றைக் கோரியுள்ளார்.

