தமிழ் சினிமாவில் தற்போதுள்ள முன்னணி நடிகர்களில் பலராலும் பார்த்துப் பொறாமைப்படும் ஒரு நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன். டிவியில் போட்டியாளராக வந்து, பின்னர் தொகுப்பாளராக மாறி, சினிமாவில் அறிமுகமாகி இப்போது முன்னணி நடிகராக உயர்ந்திருக்கிறார்.
சிவகார்த்திகேயனை 2012ம் ஆண்டு வெளிவந்த மெரினா படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் பாண்டிராஜ். அதன்பின் 2013ல் பாண்டிராஜ் இயக்கிய கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்திலும் சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்தார். அதற்கடுத்து வெளிவந்த படங்கள் கமர்ஷியலாக வெற்றிப் படங்களாக அமைய சிவகார்த்திகேயன் முன்னணி நடிகர்களின் பட்டியலில் சேர்ந்துவிட்டார்.
6 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது பாண்டிராஜ், சிவகார்த்திகேயன் மீண்டும் இணைந்துள்ள அறிவிப்பு நேற்று வெளியானது பலருக்கும் ஆச்சரியம் அளித்துள்ளது. அப்படத்தைத் தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இதுவரை ரஜினிகாந்த், விஜய், ராகவா லாரன்ஸ் ஆகியோர் நடித்த படங்களை மட்டுமே தயாரித்துள்ளது. ரஜினிகாந்த், விஜய், மாஸ் ஹீரோக்கள் என்பது அனைவருக்கும் தெரியும். காஞ்சனா படங்களின் முதலிரண்டு பாகங்களின் வெற்றி ராகவா லாரன்ஸ் நடிக்கும் காஞ்சனா 3 படத்தைத் தயாரிக்க வைத்துள்ளது.
பாண்டிராஜ் கடைசியாக இயக்கி வெளிவந்த கடைக்குட்டி சிங்கம் பெரிய வெற்றியைப் பெற்ற நிலையில் இந்தப் புதிய படத்திற்கு இப்போதே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

