சூப்பர் ஹீரோக்கள் படத்தின் க்ளைமேக்ஸை போல பரபரப்பான கட்டத்தில் இருக்கிறது ஐபிஎல்! இனி வரும் ஒவ்வொரு மேட்ச்சுமே முக்கியம் என்ற நிலையில் யாருக்கும் பங்கமில்லை என்ற முன்முடிவோடு ஒரு மேட்ச் நடந்து முடிந்திருக்கிறது. புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் டெல்லிக்கும் ஏற்கெனவே ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதிபடுத்திவிட்ட சென்னைக்குமான சம்பிரதாய மேட்ச் அது! #DDvCSK
டாஸ் வென்ற சென்னை கேப்டன் தோனி வழக்கம் போல பீல்டிங்கைத் தேர்வு செய்தார். சென்னை அணியில் எதிர்பார்த்தபடியே வில்லிக்கு பதில் எங்கிடி நுழைந்தார். டெல்லி அணியில் இரண்டு மாற்றங்கள். ஜேசன் ராய்க்கு பதில் மேக்ஸ்வெல், டாலாவுக்கு பதில் அவேஷ்! சர்ப்ரைஸாக அணியில் மேக்ஸ்வெல், போல்ட், லாமிசேன் என மூன்றே வெளிநாட்டு வீரர்கள்தான். இழக்க ஒன்றுமில்லை என்பதால் உள்ளூர் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க முடிவு செய்திருக்கலாம். மொத்த ஐ.பி.எல்லில் நான்கு வெளிநாட்டு வீரர்களுக்கு குறைவாகக் கொண்டு ஒரு அணி களமிறங்குவது இது 14-வது தடவை.
ப்ரித்வி ஷாவும் கேப்டன் ஸ்ரேயாஸும் களமிறங்கினார்கள். முதல் ஓவரிலேயே இன்ஸ்விங், அவுட்ஸ்விங் என மிதக்கவிட்டார் சஹார். இதனால் கொஞ்சம் திணறித்தான் போனார் ஷா. ஓவர் முடிவில் ஐந்து ரன்கள்தான். எங்கிடியும் அதேபோல் தெறிக்கவிட ரன் எடுக்கவே சிரமப்பட்டனர் டெல்லி ஓபனர்கள். தட்டுத் தடுமாறி ரன் சேர்த்த ஷாவும் ஒருகட்டத்தில் சஹார் பந்தில் அவுட்டாக, நாளைய நம்பிக்கை நட்சத்திரமான ரிஷப் பன்ட் களமிறங்கினார்.