இந்தியா – தென் கொரியா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தான இந்த நேரத்தில் பயங்கரவாதத்திற்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டுமென்று வலியுறுத்தினார்.தென்கொரியாவுடன் வளர்ந்து வரும் நட்புறவில் பாதுகாப்புத்துறை முக்கிய இடம் பிடித்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இரண்டு நாள் அரசு முறை பயணமாக தென்கொரியா சென்றுள்ள பிரதமர் மோடி, இன்று காலை அந்நாட்டில் உயிர்நீத்த ராணுவ வீரர்களின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.
இதைத் தொடர்ந்து தென்கொரிய அதிபரின் இல்லத்துக்கு சென்ற பிரதமர் மோடியை அதிபர் மூன் ஜே-இன் மற்றும் அந்நாட்டின் முதல் பெண் அதிகாரியான கிம் ஜுங்க்-ஹுக் ஆகியோர் வரவேற்றனர்.
அப்போது, பிரதமர் மோடி மற்றும் தென் கொரிய அதிபர் முன்னிலையில் இருநாட்டு ராணுவத்தை பலப்படுத்துவது, பொருளாதார ஒத்துழைப்பு, தொழில் கூட்டமைப்பு உள்ளிட்ட 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். முதலில் பேசிய பிரதமர் மோடி, தென்கொரியாவுடன் வளர்ந்து வரும் நட்புறவில் பாதுகாப்புத்துறை முக்கிய இடம்பிடித்துள்ளதாகவும், தென்கொரிய தொழில்நுட்பத்தில் உருவான கே-9 வஜ்ரா பீரங்கி இந்திய ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளதே இதற்கு சான்று என்றும் தெரிவித்தார்.
பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பாக இந்தியா – தென் கொரியா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி இருப்பதாக குறிப்பிட்ட அவர், இந்த நேரத்தில் பயங்கரவாதத்திற்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டுமென்று வலியுறுத்தினார்.
அப்போது, புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த தென்கொரிய அதிபருக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.
இதனை அடுத்து, பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருதான சியோல் அமைதி விருது வழங்கப்பட்டது.