நாட்டில் சுமார் 12 இலட்சம் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் உள்ளதாகவும், அப்பெண்களின் துன்பங்களைப் போக்குதல், அவர்களை வன்முறைகள் மற்றும் துஷ்பிரயோகங்கள் என்பவற்றிலிருந்து பாதுகாத்தல் உள்ளிட்டவற்றுக்கான செயற்திட்டங்களை உருவாக்குவோம் எனவும் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
பெண்களின் உரிமைகள் மற்றும் அவர்களின் தேவைகளை உறுதிப்படுத்துவது தொடர்பான கொள்கைகள் மற்றும் அவற்றுக்காக நிறைவேற்றப்பட வேண்டிய செயற்திட்டங்கள் அடங்கிய சமூக ஒப்பந்தத்தில் அனைவரின் முன்னிலையிலும் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச நேற்று (21) சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்ற மகளிர் மாநாட்டில் கையெழுத்திட்டார்.
இந்த சமூக ஒப்பந்தம் சிங்கள, தமிழ், முஸ்லிம் மற்றும் கத்தோலிக்க இனங்களைச் சேர்ந்த பெண் பிரதிநிதிகளிடம் கையளிக்கப்பட்டது. இதன்பின்னர் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
எமது புதிய அரசாங்கத்தில் பாலின அசமத்துவத்தைப் போக்கி, அனைத்துத் துறைகளிலும் ஆண்களுக்கு நிகராக பெண்கள் சமஇடத்தைப் பெறக்கூடியதொரு நிலையைக் கட்டியெழுப்புவோம். அதற்குரிய திட்டத்தை நான் ஜனாதிபதியாகப் பதவியற்றதைத் தொடர்ந்துவரும் நாளிலிருந்து நடைமுறைப்படுத்துவதாகவும் இதன்போது அமைச்சர் சஜித் பிரேமதாச மேலும் குறிப்பிட்டுள்ளார்.