நெல்லை மாநகராட்சியின் துப்புரவுப் பணியாளர்கள், பாதுகாப்பு உபகரணம் எதுவும் இல்லாமல் சாக்கடையைச் சுத்தம் செய்துவருகின்றனர். இதற்கு சமூக ஆர்வலர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
நெல்லை மாநகராட்சியில் 55 வார்டுகள் உள்ளன. மாநகராட்சியில் 100-க்கும் அதிகமான துப்புரவுப் பணியாளர்கள் உள்ளனர். அவர்கள் மாநகராட்சிப் பகுதியில் மக்கள் கூடும் இடங்கள் மற்றும் மக்களின் வசிப்பிடப் பகுதிகளில் தேங்கும் குப்பைகளைச் சுத்தம் செய்வது, கழிவுநீர் ஓடை, சாக்கடை சுத்தம் செய்வது உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு கையுறைகள், காலணிகள் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை மாநகராட்சி வழங்க வேண்டும். ஆனால், அந்த உபகரணங்கள் கொடுக்கப்படுவதில்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அத்துடன், கழிவு நீர் செல்லும் சாக்கடை, பாதாளச் சாக்கடை போன்றவற்றில் தகுந்த பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் ஆட்களைக் கொண்டு வேலைசெய்ய அனுமதிக்கக்கூடாது என உத்தரவிடப்பட்டிருக்கிறது. ஆனால், பல நேரங்களில் எந்தவித பாதுகாப்பு உபகரணமும் இல்லாமல் மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் ஆபத்தான பணிகளைச் செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகின்றனர். அதிகாரிகளின் நெருக்கடி காரணமாக ஆபத்தையும் பொருட்படுத்தாமல் சுகாதாரப் பணியாளர்கள் அந்தப் பணிகளைச் செய்கின்றனர்.
தச்சநல்லூர் மண்டலத்துக்கு உட்பட்ட வண்ணார்பேட்டை பகுதியில் உள்ள புறவழிச்சாலையில் கழிவுநீர் ஓடையை மாநகராட்சி ஊழியர்கள் வெறுங்கையுடன் சுத்தம்செய்த சம்பவத்தைப் பார்த்து அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். கழிவு நீரை வெளியேற்றவும் அதில் தேங்கிக் கிடந்த குப்பைகளை அகற்றவும் எந்த உபகரணமும் இல்லாமல் கைகளால் அதனைச் செய்தனர்.
இதைக் கண்டித்து, நெல்லையில் உள்ள சாதி மதவாத ஆதிக்க எதிர்ப்பு கூட்டமைப்பின் சார்பாக நெல்லை ஆட்சியரிடம் புகார் செய்யப்பட்டது. அதில், ‘மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்களை பாதுகாப்பு உபகரணம் இல்லாமல் பணிசெய்ய வலியுறுத்திய அதிகாரிகள் மீது வழக்குப் பதிவுசெய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினர். ஏற்கெனவே இதுபோன்று பணி செய்த காரணத்தால் மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் சிலர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளனர். அதனால் இதுபோன்று பணி செய்ய வற்புறுத்தும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளனர்.