நடிகர் ராஜ்கிரணுக்கு நேற்று பிறந்த நாள். பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தால் தான் மகிழ்ச்சியாக இல்லை என்றும் பாதிக்கப்பட்பட்ட பெண்களுக்காக பிராத்தியுங்கள் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில் எழுதியிருப்பதாவது:
இறை அருளால், இன்று (நேற்று) எனது பிறந்தநாள். பிறந்தநாள் கொண்டாடும் வழக்கம் எனக்கு இல்லை. ஆனாலும் முகநூலுக்கு வந்த பிறகு, முகநூல் உறவுகள்,பலரும் வாழ்த்துச் சொல்வதும், இன்பாக்சில், வாழ்த்துக்களைத்தெரிவிப்பதும், அவர்களாகவே டேக் பண்ணி வாழ்த்துக்களைப்பகிர்ந்து கொள்வதும், எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், புத்துணர்ச்சியையும் ஏற்படுத்துகிறது.
எல்லா முகநூல் உறவுகளுக்கும் தனித்தனியே நன்றி சொல்ல ஆசையிருந்தும் சூழ்நிலை காரணமாக அது முடியவில்லை. “நன்றி” என்ற வெறும் வார்த்தைகளால் உங்களின் அன்புக்கு ஈடுசெய்ய முடியாது. இருந்தாலும் உங்கள் அனைவருக்கும் என் மனம் கனிந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இதையெல்லாம் விட முக்கியமான ஒரு விசயம், இந்த வருட பிறந்த நாளில் நான் மகிழ்ச்சியாக இல்லை. காரணம் பொள்ளாச்சி சம்பவம். என் மகள் ஜீனத் ப்ரியா, “வாப்பா, இப்படியே இருக்காதீர்கள், என்ன செய்தால் உங்களை இந்த துயரத்திலிருந்து மீட்க முடியும்?” என்று கேட்டார். அதற்கு நான், வ்வளவு அதிகமதிகமாக இறை நாமத்தை உச்சரித்து, அவனிடம் அழுது மன்றாடி, அந்த நூற்றுக்கணக்கான பெண் குழந்தைகளின் மனதுக்கு சாந்தியையும், சமாதானத்தையும் கொடுத்து, அவர்கள் புது வாழ்க்கையை துவங்க பிரார்த்திக்கிறீர்களோ, அந்த அளவில் நான் அமைதி அடைவேன் என்று சொன்னேன்.
என் மகள் ஜீனத் ப்ரியா, ஒரு லட்சம் தடவை இறைவனின் திருநாமத்தை உச்சரித்து, அழுது வேண்டுகிறேன் என்று உச்சரிக்க ஆரம்பித்து விட்டார். அதைப்போலவே, முகநூலில் உள்ள என் எல்லா உறவுகளையும் கேட்டுக்கொள்கிறேன், உங்களால் முடிந்த அளவு நீங்கள் வணங்கும் மகா சக்தியிடம், அந்தப்பெண் குழந்தைகளுக்காக அழுது பிரார்த்தனை செய்யுங்கள். என்னை வாழ்த்துவதை விட, நீங்கள் அவர்களுக்காக செய்யும் பிரார்த்தனையே,என்னை மகிழ்ச்சிப்படுத்தும்.