தெலுங்குத் திரையுலகின் மிகப் பெரும் நட்சத்திரக் குடும்பமாக இருப்பது சிரஞ்சீவி குடும்பம். அவரது அரசியல் பிரவேசம் பரபரப்பாக ஆரம்பமாகி, அவர் அரசியலே வேண்டாம் என ஒதுங்கிவிட்டார். இருந்தாலும் சிரஞ்சீவியின் தம்பியான பவன் கல்யாண் ஜன சேனா என்ற கட்சி ஆரம்பித்து முதல் முறையாக ஆந்திர சட்டசபை தேர்தலை சந்திக்கிறார்.
தன் கட்சிக்காக பரபரப்பாக தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணம் நடத்தி வந்த பவன் கல்யாண், சில தினங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டார். கடும் வெயில் அவருக்கு ஒத்துக் கொள்ளவில்லை. டீஹைட்ரேஷன் பிரச்சினையில் சிக்கிய அவரை டாக்டர்கள் ஓய்வெடுக்கச் சொன்னார்கள். இருப்பினும் அதையும் மீறி அவர் பிரச்சாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில் சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் தேஜா, உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட அவருடைய சித்தப்பா பவன் கல்யாணைப் பார்க்க விஜயவாடா வந்து அவரைச் சந்தித்து நலம் விசாரித்தது பற்றி முகப்புத்தகத்தில் பதிவு செய்துள்ளார். அது பற்றிய தகவலைப் பதிவிட்டு அவர் விரைவில் உடல்நலம் தேற வேண்டும், மக்களுக்காச் சேவை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். அதோடு அந்தப் பதிவின் முடிவில் ஜனசேனா கட்சியின் சின்னமா ‘கிளாஸ்’ சின்னத்திற்கு ஓட்டு அளிக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.