பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவை புறக்கணித்து விட்டு அரசியல்வாதிகள் ஊடாக பல்கலைக்கழகம் சென்றால் நாட்டின் எதிர்காலம் என்னவாகும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க வலியுறுத்தியுள்ளார்.
மேலும் இது தொடர்பில் நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் கருத்து வெளியிட்ட அவர்,
“அரச சேவை இன்று அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது என்று அரச சேவையாளர்களுக்காக குரல் கொடுக்கும் நாமல் ராஜபக்ச அவர்களது ஆட்சியில் பல்கலைக்கழக உள்ளீர்ப்புக்கும் சிபாரிசு கடிதம் வழங்கினார்.
ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை
ஜனாதிபதி செயலகத்தின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்கள்.

போட்டிப் பரீட்சை எழுதுவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளார்கள். போராட்டத்தை கைவிட்டுள்ளார்கள். அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு சேவை அடிப்படையில் பிரச்சினை உள்ளது என்பதை அறிவோம்.
இவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட போது வங்குரோத்து நிலையடைந்துள்ள அரசியல்வாதிகள் அவர்களிடம் சென்று அவர்களை தூண்டிவிட்டு தமது அரசியல் செல்வாக்கை தக்கவைத்துக் கொள்ள முயற்சித்தார்கள்.
தான் ஆட்சிக்கு வந்தவுடன் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு நிரந்தர நியமனத்தை இரத்தத்தால் எழுதிக் கொடுப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.
எதிர்க்கட்சித் தலைவர் இரத்தம் சொட்டுவதை தடுத்த ஜனாதிபதிக்கு நன்றித் தெரிவித்துக் கொள்கிறோம்.
அரச சேவையை சிறந்து முறையில் மாற்றியமைக்க வேண்டும். கடந்த காலங்களில் எவ்வாறு அரச நியமனங்கள் வழங்கப்பட்டது என்பதை அனைவரும் அறிவோம்.
அரசியல்வாதிகளின் பரிந்துரைக்கு அமைய நியமனங்களை வழங்கும் கலாசாரம் முடிவுக்கு கொண்டு வர வேண்டும்” என்றார்.
