பலாலி விமான நிலைய விஸ்தரிப்பு பணிகளுக்காக பொது மக்களின் காணிகள் சுவகரிக்கப்பட்டுள்ள விடயத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சித் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
வடக்கு மாகாணத்தில் ஒன்றரை இலட்சம் இராணுவம் இருக்கின்றது. அதேவேளை யாழ்ப்பாணத்தில் பல்லாயிரக்கணக்கான இராணுவத்தினர் இருக்கின்றார்கள்.
ஆகவே வேறு இடங்களில் இருக்கக்கூடிய இராணுவத்தினரை பலாலியில் குடியேற்றுவதற்காக எங்களுக்கு ஆயிரம் ஏக்கர் காணி தேவை என்று சொல்வது ஏற்றுக்கொள்ளக்கூடிய விசயம் அல்ல.
யுத்தம் முடிந்து 10 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் அதற்குப் பின்னர் அயுத ரீதியாக எந்தவொரு செயற்பாடுகளும் இல்லாத நிலையில் தொடர்ந்தும் இலட்சக்கணக்கான இராணுவத்தை வடக்கில் வைத்துக்கொண்டு தமிழ் மக்களுடைய காணிகளை இராணுவ வசம் வைத்துக்கொண்டு இராணுவ குடியிருப்புக்களை உருவாக்குவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாது.
ஆகவே வடக்கு ஆளுநர் புரிந்துகொள்ள வேண்டும். இந்த காணிகள் மக்கள் நெடுங்காலமாக விவசாயம் செய்து வாழ்ந்து வந்த பிரதேசங்கள். ஆகவே இது இராணுவத்துக்குச் சொந்தமான நிலங்கள் அல்ல.
இந்நிலையில், பலாலியில் பிரமாண்டமான விமான நிலையம் எமக்கு இப்போது தேவையில்லை என்று பலரால் கூறப்படுகின்றது.
ஆகவே பிரமாண்டமாக விமா நிலையத்தை அமைக்கும் கூழல் வரும்போது காணிகளை சுவீகரிப்பது என்பது வேறு விடயம். இன்று அந்த மக்களிடம் காணிகளை கையளிக்க வேண்டியது தான் முக்கியமானது.
எனவே இராணுவத்துக்கு ஆயிரம் ஏக்கர், விமான நிலையத்துக்கு ஆயிரம் ஏக்கர் என்று மக்களின் காணிகளை சுவீகரிப்பது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.