தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் என்ற படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். ஒரேகட்டமாக படத்தை முடிக்க திட்டமிட்டு கோவில்பட்டிக்குக் கிளம்பிப்போன படக்குழுவினர், 18 நாட்களில் திரும்பி வந்தனர். காரணம் என்ன என்று விசாரித்தபோது, படப்பிடிப்பு செலவுக்காக தினமும் 5 லட்சம் எடுத்து செல்ல வேண்டியிருந்தது. இது தேர்தல் நேரம் என்பதால் தினம் தினம் பணம் கொண்டு செல்வதில் சிக்கல் நிலவுவதாக கூறப்படுகிறது. இதனால் அசுரன் படப்பிடிப்பை பாதியோடு முடித்துவிட்டு திரும்பிவந்ததாக சொல்லப்பட்டது.
அடுத்து, ‘சத்யஜோதி பிலிம்ஸ்’ நிறுவனத்தின் தயாரிப்பில் தனுஷ் நடிப்பில் இரண்டு படங்களை தயாரிக்கிறது. ஒரு படத்தை ‘கொடி’ படத்தை இயக்கிய துரை செந்தில் குமாரும், இன்னொரு படத்தை ‘ராட்சசன்’ படத்தை இயக்கிய ராம்குமாரும் இயக்குகிறார்கள்.
துரை செந்தில்குமார் இயக்கும் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு, கடந்த சில நாட்களாக குற்றாலத்தில் நடந்து வந்தது. இந்த படப்பிடிப்பையும் முடித்துக் கொண்டு திரும்பிவிட்டனர். இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு திரும்பியதற்கும் பறக்கும்படையினர் செய்யும் சோதனைதான் காரணமாம்.
இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தேர்தல் முடிவடைந்த பிறகு துவங்க இருக்கிறது. இந்த படத்தில் தனுஷ் உடன் சினேகா, நவீன் சந்திரா உட்பட பலர் நடிக்கின்றனர்.
இதேப்போன்று பல சிறு படங்கள் மற்றும் பெரிய படங்களின் படப்பிடிப்புகள் தேர்தல் கெடுபிடிகள் காரணமாக படப்பிடிப்பை தள்ளி வைத்துள்ளனர்.