அனைத்து வாசகர்களுக்கும் பிறக்கவிருக்கும் பராபவ தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
ஒவ்வொரு தமிழ் புத்தாண்டு தினத்தன்று எம்மவர்கள் புது கணக்கை தொடங்குவார்கள். புதிய விடயங்களையும் ஆரம்பிப்பார்கள். புதிய கலைகளை கற்கத் தொடங்குவார்கள். அந்த வகையில் தற்போது பிறக்கவுள்ள பராபவ தமிழ் புத்தாண்டு எப்போது பிறக்கிறது? சுப நேரம் என்ன? என்பதை தெரிந்துகொள்வோம்.
2026 ஏப்ரல் 14ஆம் திகதியன்று சதயம் நட்சத்திரத்தில் பராபவ தமிழ் புத்தாண்டு பிறக்கிறது. அன்றைய தினம் செவ்வாய்க்கிழமை என்பதால் குரு ஓரையும், அபிஜித் முகூர்த்த நேரமான பகல் 11:45 முதல் 12:30 மணி வரையிலான நேரமே நல்ல நேரம் என்றும், அந்த நேரத்தில் புதிய கணக்குகளை எழுதத் தொடங்கலாம் என்றும் ஆன்மீக முன்னோர்களும் ஜோதிட நிபுணர்களும் உறுதிப்பட தெரிவிக்கிறார்கள். அந்த தருணத்தில் தமிழ் புத்தாண்டான பராபவ புத்தாண்டை கொண்டாடவேண்டும்.
இந்த நன்னாளில் எம்முடைய வீடுகளிலும் அலுவலகங்களிலும் தொழிற்சாலைகளிலும் மாக்கோலமிட்டு நெய் தீபமேற்றி பஞ்சாங்கத்தை வைத்து தீப தூபம் காட்டி அதில் சில விடயங்களை – சில பக்கங்களை வாசித்திட வேண்டும்.
மேலும் அன்றைய திகதியில் அருகில் உள்ள ஆலயத்திற்கு சென்று இறைவனை வழிபடுவதும், ஏழை எளிய மக்களுக்கு தானம் வழங்குவதும் இந்த ஆண்டின் பலன்களை சிறப்பாக பெற இயலும்.
பஞ்சாங்கம் என்பது வாரம், திதி, நட்சத்திரம், யோகம், கரணம் எனும் பஞ்ச அங்கங்களை கொண்டது.
மேலும் பஞ்சாங்கம் என்பது துல்லியமான வானியல் கணிதத்தை அடிப்படையாகக் கொண்டது. எம்முடைய முன்னோர்கள் வானில் நிகழும் அற்புதத்தையும் அதிசயத்தையும் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே துல்லியமாக அவதானித்து அதனை பஞ்சாங்கத்தில் குறிப்பிட்டுள்ளனர். உதாரணமாக அமாவாசை, பௌர்ணமி, கிரகணம், ஆழிப்பேரலை, தொற்று பாதிப்பு, சர்வதேச அரசியல் மாற்றம், போர் சூழல்… என பல விடயங்களை குறிப்பிடலாம்.
அன்றைய திகதியில் எம்முடைய இல்லத்தரசிகள் வெங்காயம் மற்றும் பூண்டு ஆகிய இரண்டு சமையலறை பொருட்களை தவிர்த்துவிட்டு, வேப்பம்பூ ரசம் மற்றும் வெந்தயமும், மாங்காயும் கலந்த மாங்காய் பச்சடியை பிரத்யேகமாக தயாரித்து, அதனை இறைவனுக்கு படைத்து அனைவரும் பசியாறுவர்.
பராபவ தமிழ் புத்தாண்டில் அனைத்து வாசகர்களுக்கும் நல்ல நிகழ்வுகளும், சுப அனுபவங்களும் கிடைத்திட வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கிறோம்.
புத்தாண்டை கொண்டாடுவோம்!
புத்தெழுச்சி பெறுவோம்!

