மலையாளத் திரையுலகில் இரண்டாம் வரிசை ஹீரோக்கள் என்கிற பட்டியலில் தனக்கென ஒரு ஸ்திரமான இடத்தை பிடித்து வைத்து இருப்பவர் நடிகர் ஜெயசூர்யா. வருடத்திற்கு நான்கு அல்லது ஐந்து படங்களில் நடித்துவிடும் ஜெயசூர்யா, தற்போது கேரளாவில் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழாவை மையப்படுத்தி உருவாகும் திருச்சூர் பூரம் என்கிற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தை ராஜேஷ் மோகனன் என்பவர் இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ரதீஸ் வேகா என்பவர் தான் கதை எழுதியுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற இந்த படத்தின் படப்பிடிப்பில் நடிகர் ஜெயசூர்யா திடீரென மயங்கி விழுந்தார். படக்குழுவினர் ஓடிச் சென்று பார்த்தபோது அவரது தலையில் காயம் பட்டிருந்தது. உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து கடந்த 10 நாட்களாக சண்டைக்காட்சிகளில் நடித்து வந்ததால் அவரது உடல்நிலை சோர்வுற்று அதனால் மயங்கி விழுந்ததாக சொல்லப்படுகிறது.
சிகிச்சைக்குப் பின்னர் ஜெயசூர்யா தற்போது மீண்டும் படப்பிடிப்பிற்கு திரும்பினாலும் சண்டைக்காட்சிகளை சில நாட்களுக்கு ஒத்திவைத்துவிட்டு அதற்கு பதிலாக வசன காட்சிகளை படமாக்க ஆரம்பித்து விட்டார்களாம் படக்குழுவினர்.