தேசிய அரசாங்கம் அமைப்பதையோ, வரவு செலவு திட்டத்தை ஆதரித்து வாக்களிப்பதையோ நான் விரும்பவில்லையென்ற செய்தியை, சு.கவின் பிரதானிகள் மத்தியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று தெரிவித்தார்.
சு.கவின் மைத்திரி அணியின் எம்.பிக்கள், அரசியல் குழப்பத்தில் சு.க பக்கம் தாவிய எம்.பிக்கள் ஆகியோருடன் நேற்றிரவு மைத்திரி முக்கிய கலந்துரையாடல் ஒன்றை நடத்தியிருந்தார். சுமார் 22 பேர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர். ஈ.பி.டி.பியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தாவும் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தார்.
வரவு செலவு திட்ட வாக்கெடுப்பில் சு.க எப்படியான முடிவெடுப்பது என்பது தொடர்பில் முக்கியமாக இங்கு ஆராயப்பட்டது. மிகச்சில உறுப்பினர்களை தவிர்ந்த பெரம்பாலானவர்கள், வரவு செலவு திட்டத்தை எதிர்த்து வாக்களிக்க வேண்டுமென வலியுறுத்தினர்.
எதிர்க்கட்சியாக இருந்து கொண்டு, வரவு செலவு திட்டத்தை ஆதரித்து வாக்களித்தால் தேர்தல் சமயத்தில் மக்களிடம் செல்ல முடியாதென அவர்கள் அபிப்பிராயம் தெரிவித்தனர்.
வரவு செலவு திட்டத்தில் என்ன முடிவெடுப்பது பற்றி, வரும் 4ம் திகதி பொதுஜன பெரமுனவினரையும் இணைத்த கலந்துரையாடல் ஒன்றை ஏற்பாடு செய்து, முடிவெடுக்கலாமென ஜனாதிபதி தெரிவித்தார்.
இதேவேளை, தேசிய அரசாங்கம் அமைப்பது பற்றி எம்.பிக்கள் வினவியபோது, அதை திட்டவட்டமாக ஜனாதிபதி நிராகரித்துள்ளார். சு.க எம்.பிக்கள் சிலரது பெயர்களையும் உள்ளடக்கியதாக தேசிய அரசாங்க அமைச்சரவை பட்டியலுடன் ரணில் விக்கிரமசிங்க தன்னிடம் வந்ததாகவும், அதை தான் நிராகரித்து விட்டதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

