ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் கொல்லப்பட்ட நூற்றுக்கணக்கான உயிர்களுக்கு ரிஷாட் மட்டுமன்றி முழு அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டும் என ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
அத்தோடு அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு மாத்திரம் தண்டனை பெற்றுக் கொடுத்துவிட்டு அரசாங்கத்தை பாதுகாக்க வேண்டிய தேவை மக்கள் விடுதலை முன்னணிக்கு கிடையாது என்றும் கூறினார்.
வெலிமட பிரதேசத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “நாட்டில் மேற்கொள்ளப்பட்ட தொடர் குண்டத் தாக்குதல்கள் தொடர்பாக விசாரிப்பதற்கு ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. எனினும் தாக்குதலை மேற்கொண்ட முதலாவது சந்தேகநபர் அதாவது தற்கொலை குண்டுதாரி இறந்துவிட்டார்.
இரண்டாவது சந்தேகநபர் இந்த அரசாங்கமாகும். எனவே அரசாங்கத்திற்கு தான் தண்டனை வழங்கப்பட வேண்டும். ஆனால் அரசாங்கம் தனக்குத் தானே தண்டனை வழங்கிக் கொள்ளாது. எனவே புதிய அரசாங்கம் ஒன்று வெகுவிரைவில் அமைக்கப்பட வேண்டும்” என கூறினார்.
இதேவேளை அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக எதிரக்கட்சியினரால் கொண்டுவரப்பட்ட 10 குற்றச்சாட்டுக்கள் அடங்கிய நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவு வழங்குவதாகவும் அரசாங்கத்தின் எந்தவொரு உறுப்பினரையும் பாதுகாக்க வேண்டிய எந்தவொரு நோக்கமும் ஜே.வி.பி.க்கு கிடையாது என்றும் விஜித ஹேரத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.